ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களிடம் பிரதமர் லீ பேசினார்
ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் பங்கேற்கவுள்ள சிங்கப்பூர் வீரர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ள வீரர்களுடன் அண்மையில் மெய்நிகர் வடிவில் பேசமுடிந்ததாக அவர் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். ஒலிம்பிக் விளையாட்டுகள் இம்மாதம் 23ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை நடைபெறும். 12 விளையாட்டுகளில் பங்கேற்க 23 வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர்.
உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுகள் அடுத்த மாதம் 24ஆம் தேதி முதல் செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை நடைபெறும். அவற்றில் பங்கேற்க இதுவரை 10 சிங்கப்பூரர்கள் தகுதிபெற்றுள்ளனர். கிருமிப் பரவலால் இந்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்துவது மிகவும் சவாலாக அமைந்துள்ளது எனத் திரு லீ குறிப்பிட்டார். படகோட்டப் போட்டியாளர் ஜொவேன் போ, டான் டொக் செங் மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரிகிறார்.
அவரைப் போல் கொவிட்-19 போராட்டத்தில் முன்னிலையில் இருந்து பணியாற்றுவோர் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம் என்பதை அவர் சுட்டினார். நமது விளையாட்டு வீரர்கள் மனவுறுதியுடன் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர், விளையாட்டுகளில் பங்கேற்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர் எனப் பிரதமர் சொன்னார். செயலில் இருக்கும் கவனம், சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் போன்ற அவர்களின் குணாதிசயங்கள் பிறருக்கு நம்பிக்கையூட்டுபவை எனத் திரு. லீ கூறனார்.
முக்குளிப்பு, நெடுந்தொலைவு நீச்சல் உள்ளிட்ட ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூர் முதன்முறையாகப் பங்கேற்கவுள்ளது. அவற்றில் 21 சிங்கப்பூர் வீரர்கள் பங்கேற்கவிருப்பதைத் திரு. லீ குறிப்பிட்டார்.
காணொளி வாயிலாகப் பிரதமர் லீ, சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.