சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், ரிவர் சஃபாரி, நைட் சஃபாரி, ஜூரோங் பறவைப் பூங்கா ஆகியவற்றில் இருக்கும் டிராம் எனப்படும் பூங்காப் பேருந்துகள் அனைத்தும் இந்த ஆண்டிறுதிக்குள் மின்சாரத்தில் இயங்கவுள்ளன. கரிம வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்குடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துச் சேவைகளை வழங்குவது சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தின் இலக்கு. மாற்றத்தால் மொத்தம் 30 பூங்காப் பேருந்துகள் பாதிக்கப்படும். விலங்கியல் தோட்டம் உட்பட மண்டாயில் உள்ள மூன்று பூங்காக்களின் 24 பேருந்துகளும் பறவைப் பூங்காவின் ஆறு பேருந்துகளும் அவற்றில் அடங்கும்.
24 பேருந்துகள் ஏற்கெனவே டீசல் எரிபொருளுக்குப் பதிலாக மின்சாரத்தில்தான் இயங்கிவருகின்றன. அதனால் ஆண்டுதோறும் பூங்காப் பேருந்துகள் வெளியேற்றும் கரிம வாயுவின் அளவு 24 விழுக்காடு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மட்டுமின்றி 2025ஆம் ஆண்டுக்குள் லாரிகள், 'பகி' எனப்படும் பூங்காவிற்குள் இயங்கும் சிறு வாகனங்கள் உட்பட தனது அனைத்து வாகனங்களையும் மின்சாரத்தில் இயங்க வைப்பது வனவிலங்குக் காப்பகத்தின் இலக்கு. சில வெளி நிறுவனங்களும் பூங்காக்களுக்குச் செல்ல பேருந்துச் சேவைகளை வழங்கிவருகின்றன. 2025ஆம் ஆண்டுக்குள் அந்தப் பேருந்துகளையும் மின்சாரத்தில் இயங்க வைக்க வனவிலங்குக் காப்பகம் அந்நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது.
இத்தகைய சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்கள் இயற்கைப் பகுதிகளை அழியாமல் பார்த்துக்கொள்ளும் என்று வனவிலங்குக் காப்பகம் கூறியது. மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளால் பூங்காக்களில் காற்று கூடுதலாகச் சுத்தமாக இருக்கும். காற்றை சுவாசித்தாலே பூங்காக்களில் வேலை செய்வோருக்கும் அவற்றைச் சுற்றிப் பார்க்க வருவோருக்கும் வித்தியாசம் தெரிந்துவிடும் எனக் காப்பகம் குறிப்பிட்டது. சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தின் பூங்காப் பேருந்துகள் சேவை, சுற்றிப் பார்க்க வருவோரிடையே அதிகம் பிரபலமாக இருக்கும் ஒன்று. அவை பூங்காவின் முக்கியப் பகுதிகளுக்கு மக்களை அழைத்துச் செல்லும். பூங்காவின் பரப்பளவைப் பொறுத்து ஒவ்வொரு பேருந்திலும் அதிகபட்சமாக 40 அல்லது 70 பேர் பயணம் செய்யலாம்.
தனது வாகனங்களை மின்சாரத்தில் இயங்கச் செய்வதுடன், வனவிலங்குக் காப்பகம், மண்டாயில் அதன் பூங்காக்களில் அமைந்திருக்கும் பொதுமக்களுக்கான வாகன நிறுத்துமிடங்களிலும் ஐந்து விழுக்காட்டை மின்சார வாகனங்களுக்காக ஒதுக்கிவைத்துள்ளது. ஓட்டுநர்கள் அவற்றில் தங்கள் வாகனங்களுக்கு மின்னேற்றலாம். இனி மின்சார வாகனங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்பது வனவிலங்குக் காப்பகத்தின் நம்பிக்கை. மேலும், பூங்காக்களில் விலங்குகளுக்குத் தரப்படும் உணவு போன்ற அம்சங்களிலும் காப்பகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த தெரிவுகளைச் செய்துவருகிறது.

