உல்லாசக் கப்பலில் புறப்பட்ட பயணிகள், சற்று முன்னதாகவே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. 'டிரீம் குருசஸ்' நிறுவனத்தின் 'வேர்ல்டு டிரீம்' கப்பலில் பயணம் செய்த 40 வயதுப் பயணிக்கு கொவிட்-19 உறுதிசெய்யப்பட்டதே இதற்குக் காரணம்.
இந்த நான்கு நாள், மூன்று இரவுக் கப்பல் பயணத்தில் 1,645 பயணிகளும் 1,249 சிப்பந்திகளும் ஞாயிற்றுக்கிழமையன்று புறப்பட்டனர். நேற்று காலை ஒன்பது மணிக்குத் திரும்ப வேண்டிய கப்பல், சற்று முன்னதாக 6.30 மணிக்கெல்லாம் மரினா பே குருஸ் சென்டருக்குத் திரும்பிவிட்டது.
கொவிட்-19 உறுதிசெய்யப்பட்ட ஒரு நோயாளியின் நெருங்கிய தொடர்புடையவராக அந்தப் பயணி அடையாளம் காணப்பட்டதை அடுத்து, உடனே தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
பின்னர், அந்தப் பயணிக்குக் கப்பலிலேயே கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கப்பல் புறப்படும் நாளன்று கட்டாய 'ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை'யை அப்பயணி செய்துகொண்டார். ஆனால், அவருக்குத் தொற்று இல்லை என்று அந்தப் பரிசோதனை முடிவு காட்டியது.
இந்நிலையில், கிருமித்தொற்றை நன்கு உறுதிப்படுத்திட பயணிக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்ட பாதை வழி அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து, அந்தப் பயணிக்கு கொவிட்-19 உறுதி என்று சுகாதார அமைச்சும் நேற்று அறிவித்தது. பயணிக்கு கொவிட்-19 இருப்பது குறித்துக் கப்பலில் இருந்த அனைவருக்கும் அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டது.
கேடிவி கூடங்கள், இரவுவிடுதிகள் தொடர்பில் சிங்கப்பூரில் பெரிதாகி வரும் கிருமித்தொற்றுக் குழுமத்துடன் கப்பல் பயணிக்குத் தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட பயணியுடன் வந்திருந்த மூன்று பேர், கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே பயணிகள் இன்னும் கப்பலிலிருந்து வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.
கொவிட்-19 உறுதிசெய்யப்பட்ட பயணியுடைய தொடர்புகளின் தடம் அறியும் பணி முடிவடைந்த பின், பயணிகள் வெளியேற்றப்படுவர்.

