அண்மையில் 'கேடிவி' கூடங்களுக்குச் சென்றவர்கள், அங்குள்ள உபசரிப்புப் பணியாளர்களுடன் கலந்துறவாடியவர்கள் ஆகியோருக்காக நடைபெற்று வரும் கொவிட்-19 பரிசோதனைச் செயல்முறை, ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு நேற்று பேட்டிஅளித்தபோது திரு ஓங் இவ்வாறு கூறியிருந்தார். கூடங்களுக்குச் சென்றவர்கள் தங்களையும் தங்களின் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக்கொள்ள பரிசோதனை நிலையங்களுக்குச் செல்வதற்காக முன்பதிவு செய்திடுமாறும் அவர் அறிவுறுத்தினார். பரிசோதனை செயல்முறை, ரகசியத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவதாக வலியுறுத்தினார் அமைச்சர்.
"கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு சமூகப் பாதுகாப்புக்காக அவர்களை உடனே தனிமைப்படுத்த வேண்டும். அதற்கே தற்போது முன்னுரிமை வழங்கப்படுகிறது," என்றார் திரு ஓங்.
இந்நிலையில் ஒரு சிலருக்குப் பரிசோதனை நிலையங்களுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்வதில் தயக்கம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார் அவர்.
இவர்கள் முடிந்தவரை தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வதுடன் 'ஆன்டிஜன் விரைவு பரிசோதனை'யைத் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் வாங்கி வரச் செய்யலாம் என்று ஆலோசனை கூறினார். அடுத்த 14 நாட்களுக்குத் தங்களின் உடல்நலத்தைக் கண்காணிப்பதுடன் பிறருடன் கலந்துரையாடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
"வரும் நாட்களில் உங்களுக்கு உடல்நலமில்லாமல் போனால், உடனே ஒரு மருந்தகத்திற்குச் செல்லுங்கள், மருத்துவரைப் பாருங்கள், பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் நம்மால் உடனே கண்டுபிடிக்க முடியும்," என்று அமைச்சர் ஓங் வலியுறுத்தினார்.
சமூகத்தில் நேற்று 56 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் கேடிவி கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் 41 பேர் எனும் நிலையில் அமைச்சர் ஓங் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கேடிவி கூடங்கள் தொடர்பில் கிருமித்தொற்றுக் குழுமம் உருவாகிய நிலையில், ஜூன் 29 முதல் இக்கூடங்களுக்குச் சென்றவர்களுக்கு இலவச கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

