கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை முதியவர்கள் போட்டுக்கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து தனியார் மருத்துவர்கள் மற்றும் அடிப்படைப் பராமரிப்பாளர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் மற்றும் சிங்கப்பூரின் மருத்துவச் சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் நேற்று அறிவித்தனர்.
அத்துடன் கடிதங்களில் இணைப் பேராசிரியர் மாக் கையெழுத்தும் இட்டிருந்தார்.
தனியார் மருத்துவர்கள், அடிப்படை பராமரிப்பு வழங்குவோர், தொண்டூழியர்கள், துணை மருத்துவ நிபுணர்கள் ஆகிய அனைவரிடமும் இதற்காக உதவி கோருவதாக திரு ஓங் குறிப்பிட்டார்.
சமூகத்தில் உள்ள முதியவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக மூத்த தலைமுறை தொண்டூழியர்களும் களத்தில் இறக்கப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை முதியவர்கள் போட்டுக்கொள்வதை ஊக்குவிக்க, நடமாடும் தடுப்பூசி மையங்களை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டது. 70 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 29 விழுக்காட்டினர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"நான் வெளியே போகாமல் இருக்கும்வரை பாதுகாப்பாக இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், டெல்டா உருமாறிய கிருமி அப்படியல்ல," என்றார் அமைச்சர். தடுப்பூசி இன்றி கிருமி தொற்றும் சாத்தியம் அதிகம் என்றார் அவர்.

