தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரின் வெவ்வேறு குடியிருப்பு வட்டாரங்களில் செஞ்சிங்கங்கள் எனும் 'ரெட் லயன்ஸ்' வான்குடை சாகச வீரர்கள் தரையிறங்க உள்ளனர். தாங்கள் தரையிறங்க, அந்தந்தப் பகுதிகள் ஏற்புடையவைதானா என்பதை மதிப்பிட, அடுத்த இரண்டு வாரங்களுக்கு தீவின் பல பகுதிகளில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.
இது குறித்து நேற்று அறிவித்த சிங்கப்பூர் ஆயுதப் படை, "மதிப்பீட்டுக்காக வீரர்கள் இவ்வாறு குதிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைய வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் பாதுகாப்பு கருதி தடுப்புகள் போடப்பட்ட பகுதிகளுக்குள் வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்," என்றது.
வான்வெளி சாகசக் காட்சியின் ஓர் அங்கமாக இவ்வாண்டு சிங்கப்பூர் ஆகாயப் படையின் போர் விமானங்களும் சினூக் ஹெலிகாப்டர்களும் குடியிருப்பு வட்டாரங்களைத் தாண்டிப் பறக்கும் என்று முன்னரே கூறப்பட்டது.
சில குடியிருப்புப் பகுதிகளில் வாணவேடிக்கைகளும் இடம்பெறும்.
மரினா பே மிதக்கும் மேடையில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று அணிவகுப்பு நிகழவுள்ளது.
நுழைவுச்சீட்டுகள் குலுக்கல் முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இவ்வாண்டு தனிப்பட்ட அழைப்பின் அடிப்படையில் மட்டுமே அணிவகுப்பைப் பார்க்க முடியும்.
பார்வையாளர்கள் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று நிகழ்வுக்கு முன்னதாக கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

