தனியார் அடுக்குமாடி வீடுகளுக்கான வாடகையில் ஜூன் மாதம் மாற்றம் இல்லை. அதேவேளையில், வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகளுக்கான வாடகை மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் 1% கூடியது.
எஸ்ஆர்எக்ஸ் நிலச்சொத்து இணையவாசல் மூலம் இந்தப் புள்ளிவிவரங்கள் தெரியவருகின்றன.
வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தனியார் கூட்டுரிமை வீடுகளும் வீவக வீடுகளும் தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஜூனில் அதிகமாக இருந்தன.
ஆண்டு அடிப்படையில் கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகளுக்கான வாடகை 2020 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூனில் 8 விழுக்காடு கூடியது. மாறாக, வீவக வீட்டு வாடகை தொடர்ந்து 12வது மாதமாக ஜூன் மாதமும் அதிகரித்தது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீவக வீடுகளுக்கான வாடகை இந்த ஆண்டு ஜூன் மாதம் 9.2 விழுக்காடு அதிகரித்தது.
மாத அடிப்படையில், அனைத்து வகை வீவக வீடுகளுக்கும் உரிய வாடகை ஜூனில் கூடியது. இருந்தாலும் எக்ஸிகியூட்டிவ் வீடுகளுக்கான வாடகையில் மாற்றமில்லை.
முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் உள்ள வீவக வீடுகளுக்கான வாடகை 1.9 விழுக்காடு அதிகரித்தது. அதே நேரத்தில் முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் உள்ள வீவக வீடுகளுக்கான வாடகை 0.1 விழுக்காடுதான் கூடியது.
ஜூன் மாதம் கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகளை அதிகம் பேர் வாடகைக்கு எடுத்தனர். ஜூனில் இத்தகைய 5,468 வீடுகள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.
இந்த எண்ணிக்கை மே மாதம் 5,083 ஆக இருந்தது. ஜூன் மாதம் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கை 2.9 விழுக்காடு அதிகரித்து 1,910 ஆக இருந்தது.

