பாகுபாடும் விருப்புகளும் உள்ள உலகில், தனிநபர்கள் எப்படி முதல் அடி எடுத்துவைத்து மற்றவர்களுடன் பழகுகிறார்கள் என்பதைப் பொறுத்தே சிங்கப்பூரில் இன நல்லுறவு மேம்படக்கூடும்.
இனம், இனவாதம் ஆகியவை பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்பாடு செய்த இணைய வழி கருத்தரங்கில் அந்தக் கருத்தை முன்வைத்தார் கலாசாரம், சமூகம், இளையர்த்துறை அமைச்சரும் இரண்டாம் சட்ட அமைச்சருமான திரு எட்வின் டோங். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்தும் மாதாந்திர இணையவழி கருத்தரங்குகளில் அதுவும் ஒன்று.
அக்கம்பக்கத்தாரிடம் தினமும் காட்டும் கனிவிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளலாம் என்றார் திரு டோங்.
வேறு இனம், கலாசாரம், பின்னணியைச் சேர்ந்தவர்களைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர்களைப் பற்றிய அக்கறை அதிகமாகும். அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை ஏற்படும், என்று திரு டோங் கூறினார்.
நேற்றைய நிகழ்ச்சியில் அமைச்சருடன் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் டாக்டர் ஷாஹிரா அப்துல்லா, தமிழ் முரசின் செய்தி ஆசிரியரும் மின்னிலக்க ஆசிரியருமான தமிழவேல், ஹேஷ்.பீஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் லெனார்ட் சிம், அடித்தள அமைப்பு செயல்பாட்டாளர் ஹஃபீஸ் சொரோரி ஸஞ்சானி ஆகியோரும் பங்கேற்றனர்.
"இனம் வேறுபடுவதைப் போல நமக்கு விருப்புவெறுப்புகளும் சார்புகளும் உண்டு. ஒரே மாதிரியான விருப்பு வெறுப்புள்ளவர்களுடன் ஒட்டிப் பழகுவது மனிதமனத்தின் தன்மை." என்றார் திரு டோங்.
அதே நேரத்தில் சார்புகளும் விருப்புகளும் வேறு, எதிர்மறை போக்கு என்பது வேறு என்றும் பாகுபாடு அதனைவிட சற்று வேறு படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இனம், இனவாதத்தைக் களைய என்ன செய்யலாம் என நெறியாளரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் சிங்கப்பூர் ஆசிரியருமான திரு ஸாக்கிர் ஹுசேன் கேட்ட கேள்விக்கு, அக்கம்பக்கம் உறவுகளை நெருக்கமாக்கும் நிகழ்ச்சிகளைச் சுட்டினார். தமது ஜூ சியாட் தொகுதியைச் சேர்ந்த ஓப்பரா எஸ்டேட்டில் அமைந்துள்ள ஜாலான் பிந்தாங் தீகாவில் தேசிய தினத்தை ஒட்டி ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் வீதி கேளிக்கை நிகழ்ச்சி, அக்கம்பக்க உரசல்களைக் குறைக்க உதவியுள்ளதாக திரு டோங் சொன்னார்.
இன நல்லிணக்கத்தைப் பேண சட்டங்கள் உள்ளபோதும், மக்களே அதற்கான பணியைக் களத்தில் செய்ய வேண்டும் என்றார் அவர்.
அக்கம்பக்கத்தாரை மின்தூக்கியில் பார்க்கும்போது வணக்கம் கூறுவது போன்ற சமூக வழக்கங்களை பெற்றோர் தங்கள் பிள்ளை களுக்குக் கற்றுத் தருவதும் ஒரு வழி என்ற தமிழ் முரசின் திரு தமிழவேல், விளையாட்டின் வழியும் மக்களை ஒன்றுபடுத்தலாம் என்று யோசனை கூறினார்.
மற்ற இனங்கள் பற்றிய புரிதலை மேம்படுத்த தங்கள் கலாசாரம் பற்றிய கேள்விகளை எதிர்கொள்ள பிள்ளைகளைத் தயார்ப்படுத்த வேண்டும் என்றார் செயல் பாட்டாளர் திரு ஹஃபீஸ்.