இன ரீதியான வகைப்படுத்தலையோ இனம் சார்ந்த சுய உதவிக் குழுக்களையோ நீக்குவதால் சிங்கப்பூரின் வெவ்வேறு இனங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளும் நீங்கிவிடும் என்றில்லை என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.
சமூகத்தைத் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக, இன ரீதியான வகைப்படுத்தலும் சுய உதவிக் குழுக்களும் அதிகாரிகளுக்கு செயல்திறன்கள், விளைவுகள் குறித்து மேலும் மேம்பட்ட அறிகுறிகளை எடுத்துக்காட்டும் என்றும் வளங்களை மேலும் சிறப்பாக வழங்குவதற்கு உதவும் என்றம் அவர் கூறினார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் நேற்று நடத்திய இணைய கலந்துரையாடலில் அமைச்சர் பேசினார்.
இனம் சார்ந்த சய உதவிக் குழுக்கள் இன்றும் பொருத்தமானவையா, அவை வெவ்வேறு இனங்களை மேலும் தனிமப்படுத்தாதா எனும் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
சிங்கப்பூரில் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கம் (சிண்டா), சீன மேம்பாட்டு உதவி மன்றம், யாயாசான் மெண்டாக்கி, யூரேசியர் சங்கம் ஆகிய நான்கு சுய உதவிக் குழுக்கள் உள்ளன.
கலந்துரையாடலில் கலந்துகொண்ட தமிழ் முரசின் செய்தி ஆசிரியரும் மின்னிலக்க ஆசிரியருமான திரு தமிழவேல் இனம் சார்ந்த சுய உதவிக்குழுக் கள் தேவை இல்லாத நிலை ஒருநாள் வரும் என்று விரும்பி அதை நோக்கி செயல்படலாம் என்றாலும் தற்போதைய சூழலில் ஒவ்வொரு இனத்தின் தனித்தன்மைகளையும் சிறு சிறு வித்தியாசங்களையும் விரிவாகப் புரிந்துகொண்டு பிரச்சினைகளை மேலும் சிறப்பாகக் களைய அவை தேவை என்றார்.
"இந்திய சமூகமே ஒரேவிதமானதல்ல; மொழி, சமய வேற்று மைகளைக் கொண்டது. தற்போதைய சூழலில் இனம் சார்ந்த சுய உதவி குழுக்கள் தேவைதான். மேலும் சுய உதவிக் குழுக்கள் அந்தந்தச் சமூகத்திற்கு மட்டும் சேவை ஆற்றுவதில்லை, மற்ற இனத்தவரையும் அரவணைத்து செயல்படுகின்றன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

