சிங்கப்பூரின் முதல் பெரிய அளவிலான மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம், தெங்கே நீர்த்தேக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
இதனை நேற்று தொடங்கி வைத்த பிரதமர் லீ சியன் லூங், நிலையத்தின் வழி சிங்கப்பூர் நீடித்த நிலைத்தன்மை பெறுவதை நோக்கி பெரிய அடியை எடுத்துவைத்திருப்பதாகக் கூறினார்.
சுமார் 45 காற்பந்துத் திடல்கள் அளவிலான தெங்கே நிலையம் 60 மெகாவாட் பீக் (MWp) அளவு சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யக்கூடியது.
இதனை செம்ப்கார்ப் மிதக்கும் சூரிய மின்சக்தி நிறுவனம் வடிவமைத்து, கட்டி, நடத்தி வருகிறது. அதில் பொதுப் பயனீட்டுக் கழகம் பங்காளியாக உள்ளது.
சூரிய மின்சக்தி நிலையத்தை,
நாட்டின் சூரிய மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய மின்சக்தித் துறை விரிவடைய உதவும் என்றும் சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் இதுபோன்ற இன்னும் பல நிலையங்களை அமைக்க வழிவிடும் என்றும் பிரதமர் லீ கூறினார்.
தெங்கே சூரிய மின்சக்தி நிலையத்தில், 122,000 சூரிய மின்தகடுகளால் ஆன பத்து திட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு உற்பத்தியாகும் மின்சக்தி, தேசிய மின்சாரக் கட்டமைப்புக்குள் சேர்க்கப்படும். ஆண்டுதோறும் 16,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு களுக்குத் தேவையான மின்சாரத்தை தெங்கே நிலையத்தால் வழங்க முடியும்.
மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையங்களைக் கட்டுவதால் நீர்த்தேக்கங்களின் அகண்ட மேற்பரப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும் பெரிய அளவில் உற்பத்தி செய்யக்கூடிய நிலையங்களை உருவாக்கவும் முடியும் என்றார் திரு லீ.
தெங்கே நிலையம் வெற்றிகரமாகக் கட்டப்பட்டதைத் தொடர்ந்து, பிடோக், லோவர் செலேத்தார் நீர்த்தேக்கங்களிலும் அத்தகைய நிலையங்கள் இவ்வாண்டு இறுதியில் கட்டிமுடிக்கப்படும் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

