இம்மாதம் தொடங்கவுள்ள ஒரு முன்னோட்டத் திட்டத்தின்கீழ் விரைவில் அதிகமான வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சிங்கப்பூர் வர இயலும். சிங்கப்பூர் வேலைவாய்ப்பு முகவைகள் சங்கம் இத்திட்டத்தை வழிநடத்தவுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், சிங்கப்பூரில் நுழையுமுன் அந்தப் பணிப்பெண்கள் தங்களது தாய்நாடுகளில் கூடுதல் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டும்.
அதாவது, தங்களது நாடுகளில் உள்ள பிரத்தியேக தனிமைப்படுத்தும் இடங்களில் 14 நாள்கள் தங்கியிருந்து, அவர்கள் பலமுறை கொவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
இங்கு வந்தபின் 14 நாள் இல்லத் தனிமை உத்தரவு, கொரோனா பரிசோதனை, பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் போன்ற நடைமுறைகளுக்கு அவர்கள் உட்பட வேண்டும்.
முதற்கட்டமாக, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் நாடுகளில் இருந்து வரும் பணிப்பெண்களை இத்திட்டம் உள்ளடக்கும்.
இந்த முன்னோட்டத் திட்டத்தின்கீழ் பணிப்பெண்களை வேலைக்கு எடுக்கும் முதலாளிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட 70 வேலைவாய்ப்பு முகவைகள் இத்திட்டத்தில் பங்கெடுக்கின்றன.