கொவிட்-19 பரவலால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இவ்வட்டார நாடுகளுக்கு உதவுவதில் சாங்கி வட்டார மனிதநேய உதவி, பேரிடர் தணிப்பு ஒருங்கிணைப்பு மையம் (ஆர்எச்சிசி) முக்கியப் பங்காற்றும்.
சிங்கப்பூர், வெளிநாடுகள், மனிதநேய உதவிப் பணிகளில் ஈடுபட்டு வரும் அனைத்துலக அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்திற்கு சாங்கி கடற்படைத் தளத்தில் அமைந்திருக்கும் அந்த மையம் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்து இருந்தது.
அந்தக் காணொளிக் கலந்துரையாடலின்போது கொவிட்-19 இடர்தணிப்பு நடவடிக்கைகள், தகவல் பகிர்வு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கிய மருந்துப்பொருள்களைக் கொண்டு செல்லுதல் போன்றவற்றில் பலதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
மனிதாபிமான உதவி, பேரிடர் தணிப்பு நடவடிக்கைகளை 'சாங்கி ஆர்எச்சிசி' ஒருங்கிணைக்கும்.
இக்கட்டான சூழல்களில், பேரளவிலான தளவாடச் சவால்களைச் சமாளிக்க தளபத்திய, கட்டுப்பாடு, ஒருங்கிணைப்புத் திறன்களில் பயற்சி பெற்ற இராணுவத்தினரின் பங்களிப்பு தேவைப்படுகிறது என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் குறிப்பிட்டார்.
2008ல் 138,000க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான நர்கிஸ் புயல் போன்று இந்த வட்டாரம் பல மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டதையடுத்து, 'சாங்கி ஆர்எச்சிசி' ஏற்படுத்தப்பட்டது.
"இப்போது ஆசியான் உறுப்பு நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளும் கொரோனா அலையை எதிர்கொண்டு வருகின்றன. அதற்கு இணங்க, நிலைமை மோசமாகலாம் எனும் எதிர்பார்ப்பில், 'சாங்கி ஆர்எச்சிசி' உச்ச விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளது," என்று டாக்டர் இங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வட்டாரத்தில் கொவிட்-19 பரவல் நிலவரம் குறித்த தகவல்களைத் தனது பங்காளிகளுக்கு வழங்க தனது 'ஆப்பரா' கணினித் தகவல் அமைப்பு இணையவாயிலை மையம் பயன்படுத்திக்கொள்ளும் என்று 'சாங்கி ஆர்எச்சிசி'யின் இயக்குநர் கர்னல் மெல்வின் டான் தெரிவித்து இருக்கிறார்.
"செயல்பாட்டு அனுபவத்தையும் வட்டார நாடுகளின் இராணுவம், அரசு சாரா நிறுவனங்கள் எனப் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புகளையும் கொண்டுள்ள 'சாங்கி ஆர்எச்சிசி'யால் உதவி, இடர்தணிப்புப் பணிகளை ஒருங்கிணைக்க முடியும்," என்றார் திரு டான்.
கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, இவ்வட்டாரத்தில் இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்தபோது மீட்பு, உதவிப் பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு இராணுவத்தின் உதவியை ஒருங்கிணைப்பதிலும் பயன்படுத்திக்கொள்வதிலும் 'சாங்கி ஆர்எச்சிசி' உதவி வருகிறது.
2015ல் நேப்பாளத்திற்கும் 2018ல் லாவோசிற்கும் பேரிடர் தணிப்புக் குழுக்களையும் அவசரகால உதவிப்பொருள்களையும் அம்மையம் அனுப்பி வைத்தது.

