தொழில்துறை 4.0 தீர்வுகள் (industry 4.0 solutions) எனும் பெயரில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட திட்டத்தால் 90 நிறுவனங்கள் பலனடைந்துள்ளன. அத்திட்டத்தின் மூலம் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தலாம்.
இந்த நிறுவனத்தில் உள்ள கிட்டத்தட்ட 280 பதவிகள் பணி வடிவமைப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
உற்பத்தித்துறை நிறுவனங்களில் பல ஆண்டுகளாக இருந்து வரும் மேற்பார்வையாளர், செயல்முறைப் பிரிவு நிர்வாகிகள், பொறியாளர்கள் ஆகிய பதவிகள் இவற்றில் அடங்கும்.
புதிய அணுகுமுறையால் ஏறத்தாழ 1,500 ஊழியர்களின் வேலை வடிவமைப்பு மாறக்கூடும்.
அவர்கள் மேலும் முக்கியமான பணிகளில் ஈடுபட அது வகை செய்யும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.
தொழில்துறை 4.0 தீர்வுகள் திட்டம் குறித்து அவர் நேற்று முன்தினம் கூடுதல் விவரங்களைத் தந்தார்.
இத்திட்டத்தை சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பும் சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனமும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கின.
2022ஆம் ஆண்டுக்குள் மேலும் 210 உற்பத்தித்துறை நிறுவனங்
களுக்கு இத்திட்டம் உதவிக்கரம் நீட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நிறுவனங்களின் செயல்முறைகளில் உள்ள குறைபாடுகளை அடையாளம் காண புதிய திட்டம் உதவும்.
அதையடுத்து, தொழிலாளர் உற்பத்தித்திறன் துரிதமாகச் செயல்படுதல் போன்ற சவால்களை எதிர்கொள்ள வழிகாட்டும் வகையில் எட்டு வாரப் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
பயிற்சித் திட்டத்தை 'மெக்கின்சி அண்ட் கம்பனி', 'இஒய்' ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் வழிநடத்துவர்.
தொழில்துறை 4.0 தீர்வுகள் திட்டத்தை நிறுவனங்கள் சோதனைமுறையாக நடத்திப் பார்க்கலாம். அவ்வாறு செய்யும் நிறுவனங்களுக்கு திட்டத்தை நடை
முறைப்படுத்த உதவும் படிப்படியான வரைபடம் தரப்படும்.
இந்த வரைபடம் ஊழியரணி உருமாற்றத்துக்குப் பெரிதும் ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. திட்டத்தால் பலனடைந்த 90 நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்து வருமானத்தை அதிகரித்து $60 மில்லியன் ஈட்டும் சாத்தியத்தை ஏற்படுத்தித் தரும் செயல்முறைகளை அடையாளம் கண்டுள்ளன. திட்டத்தால் பலனடைந்த சூப்பர்ஃபுட்ஸ் நிறுவனத்தின் செயல்முறையை அமைச்சர் டான் நேரில் சென்று பார்வையிட்டார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காடு உற்பத்தித் துறையிடமிருந்து வந்தது.

