ஒலி, ஒளிபரப்பு ஊடகங்களில் முழுப் பொய்த் தகவல்களை அடையாளம் காண அனைத்துலக போட்டி ஒன்றுக்கு 'ஏஐ சிங்கப்பூர்' நிறுவனம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதை அது சிங்கப்பூர் தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக அது மேற்கொள்ள உள்ளது.
நம்பகமான ஊடக சவால் திட்டமான இது ஐந்து மாத காலத்துக்கு நீடிக்கும். ஒலி, ஒளிநாடாக்களில் செய்யப்பட்ட மாற்றங்களைக் கண்டறியும் விதமாக உலகின் செயற்கை நுண்ணறிவுப் பிரியர்களும் ஆய்வாளர்களும் இந்தத் திட்டத்தின் மூலம் அதற்கான தீர்வுகளை வடிவமைக்கவும் அதை சோதித்துப் பார்க்கவும் ஊக்கம் அளிக்கிறது என்று 'ஏஐ சிங்கப்பூர்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்துலக பங்கேற்பாளர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்கள் மூலம் தீர்வுகளை நாடுவதால் இந்தப் போட்டி சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு மையமாக உருவெடுக்க உதவும் என ஏஐ சிங்கப்பூர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தப் போட்டியை உள்ளூர் ஊடகங்களான தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், மீடியாகார்ப்பின் சிஎன்ஏ ஏற்று நடத்துகின்றன. இதற்காக இவை 800 செய்தித் தகவல்கள், நேர்காணல்களை வழங்கியுள்ளன.
அத்துடன், போட்டி பங்கேற்பாளர்களுக்கு 4,000 உண்மையான ஒலி, ஒளி நாடாக்களும் 8,000 பொய் அல்லது போலி ஒலி, ஒளி நாடாக்களும் வழங்கப்படும். இவற்றின் உதவியுடன் பங்கேற்பாளர்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு மாதிரி தீர்வுகளை சோதித்துப் பயிற்சியில் ஈடுபடலாம் என்று அது தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் வீடியோப் பதிவு பெரும்பாலும் போலியானதா என்பதை அவர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.
இந்தப் போட்டியில் இயந்திரக் கல்வி, கணினி, ஊடக தடயவியல் துறையில் அனுபவம், பயிற்சி பெற்றவர்கள் கலந்துெகாள்ளலாம் என்று கூறப்படுகிறது.
இந்தப் போட்டி குறித்து கருத்துரைத்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியரும், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியருமான திரு வாரன் ஃபெர்னாண்டஸ், பொய்ச் செய்திகள் ஊடக தளத்தை மாசுபடுத்தி வருவதாகத் தெரிவித்தார். அது பரவும்போது படிப்போர், கேட்போர் உண்மை எது பொய் எது எனப் பிரித்துப் பார்க்க சிரமப்படுகின்றனர் என்று கூறினார்.
"இதனால், முக்கிய பிரச்சினைகள் குறித்து பயனுள்ள முறையில் சமூகத்தால் விவாதம் மேற்கொள்ள முயற்சிகளை குலைக்கிறது. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள மக்களுக்கு உதவ ஊடகங்களுக்கு பங்குண்டு.
"இதற்காக அவை தங்களிடம் உள்ள அனைத்துச் சாதனங்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும்," என்று திரு வாரன் ஃபெர்னாண்டஸ் விவரித்தார்.

