ஃபேஸ்புக் வாயிலாக நான்கு பேரிடம் பணமோசடி செய்ததாக சந்தேகத்தின்பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கடந்த வியாழக்கிழமையன்று கைதுசெய்யப்பட்ட அந்த 26 வயதுப் பெண், ஆடவர் ஒருவரிடம் தந்திரமாகப் பேசி தனது வங்கிக் கணக்குக்கு 300 வெள்ளி மாற்றும்படி கேட்டுக்கொண்டார்.
அதையடுத்து, தாம் இந்தப் பெண்ணால் ஏமாற்றப்படுகிறோம் என்பதை அறிந்துகொண்ட அந்த ஆடவர், உடனே இதுகுறித்து போலிசில் புகார் செய்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில் அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டார்.
புகார் கொடுத்த அந்த ஆடவருக்கு முன்னாள் சக ஊழியர் ஒருவரிடம் இருந்து, ஃபேஸ்புக் தகவல் ஒன்று வந்தது. அதில், தான் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாகவும் உடனடியாக பணம் $300 தனது வங்கிக் கணக்குக்கு அனுப்பி உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தத் தகவல் உண்மையிலேயே தனது முன்னாள் சக ஊழியரிடம் இருந்துதான் வந்துள்ளது என்று நம்பி, அவர் கேட்டுக்கொண்ட தொகையை அந்த வங்கிக் கணக்கில் போட்டார்.
அதன்பின்னர், தனது சக ஊழியரைத் தொடர்புகொண்ட போதுதான் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்ததாக அந்த ஆடவர் கூறினார்.
அவரின் சக ஊழியரின் ஃபேஸ்புக் கணக்கு தற்போது செயல்பாட்டில் இல்லையென்பது தெரியவந்ததையடுத்து அந்த ஆடவர் இதுகுறித்து போலிசில் புகார் கொடுத்தார்.
கைதுசெய்யப்பட்ட அந்தப் பெண், மேலும் மூவரை இதுபோல தந்திரமாக ஏமாற்றியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

