தேசிய கீதம், நாட்டுக் கொடி போன்ற தேசிய சின்னங்களை மேலும் புத்தாக்கத்துடன் மக்கள் பயன்படுத்துவதை அரசாங்கம் மறுஆய்வு செய்யுமாறு குடிமக்கள் பணிக்குழு ஒன்று பரிந்துரை செய்துள்ளது.
அதே சமயம் சின்னங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, இணையத்தில் ஒருங்கிணைந்த புகார் தளம் ஒன்றையும் தொடங்கலாம் என்று தேசிய சின்னங்களுக்கான குடிமக்கள் பணிக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
பணிக்குழுவைச் சேர்ந்த 47 சிங்கப்பூரர்கள், தங்களின் கண்டுபிடிப்புகளை அறிக்கை வடிவில் கலாசார, சமூக, இளையர் அமைச்சுக்குச் சமர்ப்பித்திருந்தது.
கொடி வணக்கம் செய்வதை அதிகாரப்பூர்வ மொழிகளில் நடத்துவது, தேசிய தின அணிவகுப்பின்போது பற்றுறுதி மற்றும் தேசிய கீதத்தைச் செவிப்புலன் குன்றியவர்களும் புரிந்துகொள்வதற்காக சைகைமொழியை இணைப்பது போன்ற ஆலோசனைகளையும் பணிக்குழு முன்வைத்துள்ளது.
பற்றுறுதியில் இடம்பெறும் 'இனம், மொழி, மதம் ஆகிய வேற்றுமைகளை மறந்து' என்ற வாசகத்தை அகற்றுவது, அதிகாரத்துவ தேசிய சின்னங்களை அதிகப்படுத்துவது போன்ற பல்வேறு விவாதங்கள் கடந்த நான்கு மாதங்களாக நடந்து முடிந்ததை அடுத்து 40 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, பற்றுறுதியில் மாற்றமில்லை என்றும் கூடுதல் தேசிய சின்னங்கள் தேவையில்லை என்றும் முடிவாகி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் பணிக்குழுவின் அறிக்கையை இணையத்தில் படிக்குமாறு கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் நேற்று கேட்டுக்கொண்டார்.
தேசிய தினம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் இச்சின்னங்கள் அர்த்தமளிப்பதை ஆராய இது ஒரு நல்ல வழி, சரியான நேரம் என்றார்.
பொதுமக்களில் கிட்டத்தட்ட 1,500 பேரிடமிருந்து கருத்து திரட்டிய பணிக்குழு, நாட்டுக் கொடியை சிங்கப்பூரர்கள் உயர்வாகக் கருதுகிறார்கள் என்பதையும் கொடியைச் சரியான முறையில் காட்சிக்கு வைப்பதில் அக்கறை எடுக்கிறார்கள் என்பதையும் கண்டறிந்தது.
இருப்பினும், தேசிய கீதத்தில் இடம்பெறும் வரிகளை மக்கள் புரிந்துகொண்டுள்ளதை மேலும் வலுவாக்கலாம் என்று பணிக்குழு சுட்டியுள்ளது.
அத்துடன் தேசிய அடையாளம் தொடர்பான உரையாடல்களை ஊக்குவிக்கும் அதிகப்படியான ஆற்றல் பற்றுறுதிக்கு உண்டு என்றும் பணிக்குழு கூறியுள்ளது.
பள்ளிப் பருவத்தையும் தாண்டி மக்களின் அன்றாட வாழ்வில் தேசிய சின்னங்களுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றது அறிக்கை.
சின்னங்களின் பயன்பாடு தொடர்பில் விதிமுறைகளைத் தளர்த்தினாலும் அதே சின்னங்கள் தவறாகச் சித்திரிக்கப்பட்டிருந்தால் அதை மக்கள் உடனே தெரிவிக்க மின்னிலக்கப் புகார் தளம் ஒன்று தொடங்கப்படலாம் என்றது பணிக்குழு.

