பல இனங்கள், பல தலைமுறைகளைச் சேர்ந்த இனப் பிரச்சினைகள் பற்றிய வெவ்வேறான கண்ணோட்டங்களையும் கருத்துகளையும் சிங்கப்பூர் அங்கீகரிக்க வேண்டும். அவற்றை ஒருபோதும் அலட்சியப்படுத்திவிடக்கூடாது என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் எல்லா இனத்தவருக்கும் உரிய பொதுவான வாய்ப்பு வசதிகளை தொடர்ந்து பெரிதாக்கி விரிவுபடுத்தும் முயற்சிகளின் அடிப்படை, அத்தகைய பலதரப்பட்ட கண்ணோட்டங்களை முக்கியமானதாகக் கருதுவதில்தான் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அவை சிங்கப்பூரர்களின் நடைமுறை உண்மைகளைப் பிரதிபலிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஜாமியா சிங்கப்பூர் ஏற்பாட்டில் கேலாங்கில் இருக்கும் ஜாமியா இஸ்லாமிய நிலையத்தில் நடந்த இன நல்லிணக்க ஆய்வரங்கில் அமைச்சர் உரையாற்றினார்.
ஆய்வரங்கில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சின் பொதுத் தூதரும் எஸ். ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுப் பள்ளியின் நிர்வாகத் துணைத் தலைவருமான ஓங் கெங் யோங், சிங்கப்பூரர்கள் ஒருவர் மற்றொருவரைச் சகித்துக்கொள்ளும் நிலையில் இருந்து, பல கலாசாரங்களில் பல்வேறு வழமைகள் நிலவுவது ஏன் என்பதைப் புரிந்துகொண்டு மற்றவர்களைப் போற்றும் நிலைக்கு மேம்பட வேண்டும் என்று கருத்துரைத்தார்.
ஜாமியா சிங்கப்பூரின் மூத்த இயக்குநரும் அரசியல் வல்லுநருமான பேராசிரியர் ஹுசேன் முத்தாலிப், சிறுபான்மை இனத்தவரிடையே உள்ள எளிதில் பாதிக்கப் படுவோரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படும் வகையில் பெரும்பான்மை இன மக்கள் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

