இளையருக்கு உதவும் புதிய மனநலச் சேவை தொடக்கம்
ஷைன் சிறார், இளையர் சேவைகள் என்ற உள்ளூர் அறப்பணி அமைப்பின் 'ரிசிலியன்ஸ்' என்ற புதிய இளையர் சமூக உதவிக் குழு சென்ற ஆண்டு அக்டோபரில் உருவானது. அது நேற்று அதிகாரபூர்வமாக 'ஸூம்' செயலி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஷைன் அமைப்பு, 'எனக்கு மனநலம்' என்ற ஓர் இயக்கத்தையும் நேற்று தொடங்கியது.
இளையரிடையே மனநலப் பிரச்சினைகள் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்துவது குழுவின் நோக்கம்.
பிரச்சினைகள் இருப்போரை முன்னதாகவே கண்டறிந்து உதவிக்கான வழிகளை ஏற்படுத்தித் தருவதோடு இளையரின் மனநலனில் பெற்றோரையும் சகாக்களையும் ஈடுபடுத்தவும் குழு பாடுபடும்.
அந்த நிகழ்ச்சியில் கலாசார, சமூக இளையர் துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
"மனநலப் பிரச்சினை உள்ளவர்கள் கூச்சப்படாமல் உதவி நாடுவதை வழமையாகக்கொண்ட, எல்லாரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க நாம் விரும்புகிறோம்," என்று திரு எரிக் சுவா குறிப்பிட்டார்.
மீட்சிப்பாதையில் பொருளியல்; இருந்தாலும் இன்னமும் இடர்கள்
கொரோனா காரணமாக ஏற்பட்ட மந்தத்தில் இருந்து சிங்கப்பூர் பொருளியல் நல்ல முறையில் மீண்டு வருகிறது என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
உலகத் தேவைகள் சூடுபிடிப்பதும் உள்ளுரில் தடுப்பூசி விகிதம் கூடுவதும் சிங்கப்பூரின் பொருளியல் எதிர்பார்க்கப்படுவதைவிட சிறப்பாக மீட்சி அடைய உதவும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.
என்றாலும் இன்னமும் பல இடர்கள் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பணவீக்கமும் மின்னணுப் பொருட்களுக்கான தேவைகள் மெதுவடைவதும் அத்தகைய பாதக அம்சங்களில் அடங்கும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.
அதேவேளையில், அடுத்த சில ஆண்டுகளில் பொருளியல் செயல்திறன் பல்வேறு துறைகளிலும் ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிடு கிறார்கள். சிங்கப்பூர் பொருளியல் சென்ற ஆண்டில் 5.4% சுருங்கியது. அது இந்த ஆண்டில் 4% முதல் 6% வரை கூடும் என்று வர்த்தக தொழில் அமைச்சு கணித்துள்ளது.
இந்த ஆண்டு வளர்ச்சி 6.3% முதல் 7.5% வரை இருக்கும் என்று பல பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்து உள்ளனர்.
மூர்க்கமாக நடந்துகொண்ட ஆடவர் கைதானார்
லாவண்டர் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே இருக்கும் ஒரு காப்பிக்கடையில் போலிஸ் அதிகாரிகளை சண்டைக்கு வரும்படி சவால்விட்டதாகக் கூறப்படும் 41 வயது ஆடவர் ஒருவரை போலிசார் மின் அதிர்வு துப்பாக்கியைப் பயன்படுத்தி மடக்கி கைதுசெய்தனர். அந்த ஆடவர் காப்பிக்கடையில் இருந்தவர்களை நோக்கி நாற்காலிகளை வீசி எறிந்தார் என்றும் கூறப்படுகிறது.
அவர், போலிஸ் அதிகாரிகளிடத்திலும் தன்னை சுற்றி இருந்தோரிடமும் மூர்க்கமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவரங்களை போலிசார் வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தனர். போலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வன்செயல் பயன்படுத்தப் படுவதை போலிஸ் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று அறிக்கை தெரிவித்தது.

