பல்வேறு மோசடிகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் $8.2 மில்லியனுக்கும் கூடுதலான தொகையை இழந்ததை அடுத்து, அம்மோசடிகளில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் முந்நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தச் சந்தேகப் பேர்வழிகள் 15 முதல் 77 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்களில் 210 பேர் ஆண்கள், 92 பேர் பெண்கள் என்றும் காவல்துறை தெரிவித்தது.
இணையக் காதல், இணைய வணிகம் அரசாங்க அதிகாரிகள், சீன அதிகாரிகள்போல் ஆள்மாறாட்டம், வேலை, போலி சூதாட்ட இணையத்தளம், கடன் போன்ற மோசடிகள் தொடர்பில் வந்துள்ள 800க்கும் மேற்பட்ட புகார்களில் அவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
"மோசடியில் தொடர்புடையோர்க்கு எதிராகக் காவல்துறை கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும். குற்றவாளிகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று காவல்துறை கூறியிருக்கிறது.
இம்மாதம் 3ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதிவரை வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் ஏழு பிரிவுகளின் காவல்துறை அதிகாரிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அந்தச் சந்தேகப் பேர்வழிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏமாற்று, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல் அல்லது உரிமமின்றி கட்டண சேவைகளை வழங்குதல் போன்றவை தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
குற்றம் புரிந்தது மெய்ப்பிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்குப் பத்தாண்டுவரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் கட்டண சேவைகளை வழங்கும் தொழிலில் ஈடுபடுவோர்க்கு $125,000 வரை அபராதம், மூன்று ஆண்டுவரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
குற்றங்களில் உடந்தையாக இருப்பதைத் தவிர்க்க, தங்களது வங்கிக் கணக்குகளை அல்லது கைபேசி எண்களைப் பயன்படுத்திக்கொள்வதாக எவரேனும் அணுகினால் அவர்களைப் புறக்கணிக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தப்படுகின்றனர். குற்றச்செயல்களுடன் அந்த எண்கள் தொடர்புபடுத்தப்பட்டு இருந்தால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டி இருக்கலாம்.
மோசடிகள் தொடர்பில் கூடுதல் விவரம் அறிய www.scamalert.sg என்ற இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-722-6688 என்ற நேரடி அழைப்பு எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
இத்தகைய மோசடிகள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையப்பக்கம் வழியாகத் தகவல் தரலாம். அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும்.