தனியார் மறுவிற்பனைச் சந்தை உறுதியாக மீண்டு இருக்கிறது. சென்ற ஆண்டு ஏறத்தாழ 8,880 கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகள் விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கை, 2019ல் கைமாறிய 7,550 வீடுகளுடன் ஒப்பிடுகையில் 16 விழுக்காடு அதிகம்.
அதோடு, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏறத்தாழ 7,520 மறுவிற்பனைகள் நடந்துள்ளன. 2013 முதல் 2016 வரை இடம்பெற்ற முழு ஆண்டு விற்பனைகளைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2018ல் மூன்றாவது காலாண்டில் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. காலாண்டு அடிப்படையில் தனியார் வீடுகளின் விற்பனை 45 விழுக்காடு குறைந்திருந்தது. அதற்குப் பிறகும் மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை குறைவாகவே இருந்து வந்தது. காலாண்டு அடிப்படையில் சராசரி விற்பனை ஏறத்தாழ 1,500 வீடுகளாக இருந்தது.
ஆனால் சென்ற ஆண்டு இரண்டாவது பாதியில் சந்தை சூடுபிடித்தது. இந்த ஆண்டின் முதல் பாதியில் ஒவ்வொரு காலாண்டிலும் 3,700க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனையாயின. இந்த நிலவரம் தனியார் மறுவிற்பனை சந்தையில் ஆக்ககரமான அறிகுறியாக தெரியவந்துள்ளது.
மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை அதிகரித்து இருப்பதால் அண்மையில் பல இடங்களிலும் உள்ள வீடுகளின் விலை கூடி உள்ளது.
சென்ற ஆண்டு இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூட்டுரிமை அடுக்குமாடி மறுவிற்பனை வீடுகளின் விலை ஒட்டுமொத்த சந்தையைப் பொறுத்த வரை, 4.4 விழுக்காடு கூடியது. சதுர அடி $1,318 என்ற விலையில் வீடுகள் கைமாறின.

