சிங்கப்பூர்-இந்தியா சமரச உச்சநிலை மாநாட்டில் அமைச்சர் எட்வின் டோங் விளக்கம்
தொழில்துறை சச்சரவுகளுக்குச் சமரச அணுகுமுறை மூலம் உடன்பாடு காண்பதே நல்ல முதல் காரியம் என்று இரண்டாம் சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்தார். இருந்தாலும் சம்பந்தப்பட்ட தரப்பு சொன்னதைச் செய்யாமல் போய்விடலாம் என்று பலர் கவலைப்பட அதில் இடமுள்ளதாக அவர் கூறினார்.
ஆகையால் சச்சரவுகளுக்கு சமரசம் மூலம் எட்டப்படும் தீர்வை இரு தரப்புகளும் மீறாது என்பதற்கான உத்தரவாதம் அதில் இடம்பெற வேண்டியது முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சருமான திரு டோங், இந்தியா-சிங்கப்பூர் முதலாவது சமரச உச்சநிலை மாநாட்டில் சனிக்கிழமை உரையாற்றினார். அந்த மாநாடு கொவிட்-19 காரணமாக இணையம் வழி நடந்தது.
அதில் இந்தியாவின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, சிங்கப்பூரின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் இருவரும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினர். கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது.
சமரச ஏற்பாடு தொடர்பில் சிங்கப்பூரும் இந்தியாவும் மேலும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
சமரச அணுகுமுறை என்பது பொதுவாக வேகமாகத் தீர்வு ஏற்பட வழி வகுக்கும். இது செலவு குறைந்த அணுகுமுறை.
சிங்கப்பூரர்கள்-இந்தியர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு இடையில் அது நன்கு பிரபலமானதாகவும் இருக்கிறது என்று திரு டோங் கூறினார்.
அனைத்துலக வர்த்தக சச்சரவு களுக்குச் சமரச அணுகுமுறை மூலம் ஏற்பட்ட தீர்வு நடப்புக்கு வருவதை 'சிங்கப்பூர் சமரச உடன்பாடு' என்ற ஓர் ஏற்பாடு உறுதிப்படுத்துவதாக அமைச்சர் தெரி வித்தார்.
இந்த உடன்பாடு, ஐநா அனைத்துலக வர்த்தக சச்சரவு தீர்வு ஏற்பாடாகும். அது சென்ற ஆண்டு நடப்புக்கு வந்தது. அதில் 54 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. அதை ஆறு நாடுகள் நடைமுறைப் படுத்தி உள்ளன.
சமரச அணுகுமுறை என்பது சம்பந்தப்பட்ட தரப்புகள், நடுவர் ஒருவரின் தீர்ப்பு இல்லாமல் தாங்களாகவே ஒரு தீர்வை எட்டும் அணுகுமுறையாகும்.
சிங்கப்பூர் சமரச உடன்பாடு இல்லை எனில் ஒரு நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இணக்கத்தை வேறு ஒரு நாட்டில் அமல்படுத்த சட்டபூர்வ வழி இல்லாமல் போய்விடும்.
அதாவது மற்றொரு நாட்டில் அந்த தீர்வை நடப்புக்குக் கொண்டு வர விரும்பும் தரப்பு அதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்.
மாநாட்டில் பேசிய தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், சிங்கப்பூர் சமரச உடன்பாடு, நியூயார்க் உடன்பாட்டைப்போல் செல்வாக்கு மிக்கதாக ஆகி பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

