கொவிட்-19 கிருமிப் பரவல் இளையர்கள், சிறுவர்களின் மனநலனைப் பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் யுனிசெஃப் உள்ளிட்ட பல அனைத்துலக அமைப்புகள் எச்சரித்துள்ளன. கிருமிப் பரவலால் ஒரு கூட்டுக்குள் அடைபட்டது போன்ற உணர்வு நீடித்தால் அதன் பாதிப்பு பல்லாண்டுகள் தொடரும் என்கிறது ஓர் அண்மைய ஆய்வு.
கொவிட்-19 கிருமிப் பரவலால் இளையர்கள், சிறுவர்கள் ஆகியோரின் மனநலம் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிருமிப் பரவலின் தாக்கத்தால் இவர்களது மனநலம் தொடர்ந்து நீண்டகாலத்திற்கு மேலும் பாதிக்கப்பட்டதாக 29 நாடுகளில் பத்தில் நால்வர் நினைப்பதாக இப்ஸோஸின் புதிய அனைத்துலக ஆய்வு குறிப்பிடுகிறது. இப்ஸோஸ் ஆய்வு, ஆலோசனைகளை மேற்கொள்ளும் உலக அளவிலான நிறுவனம் ஆகும்.
உலக இளையர் திறன்கள் தினத்தை ஒட்டிய கருத்துக்கணிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. கொவிட்-19 கிருமிப்பரவலால் பிள்ளைகளின் கல்வி, மனநலன் மற்றும் திறன் மேம்பாட்டின் மீதான தாக்கம் ஆகியவை பற்றி 29 நாடுகளைச் சேர்ந்த 16 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் கருத்துக்கணிப்பில் தெரிவித்தனர்.
பள்ளிப் பாடங்களில் கவனத்தைக் கட்டிக்காப்பது, வகுப்பறைகளுக்கு மீண்டும் திரும்பும் இளையர்களை அதிகம் பாதிக்கக்கூடிய விவகாரம் என்று ஆய்வில் கலந்துகொண்ட பலரும் கூறினர்.
சராசரியாக 17 வயது வரையிலான மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பும்போது பாடங்களில் கவனம் செலுத்து
வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குவர் என்று பத்தில் நான்கு பேர் நினைத்தனர். பள்ளிச் சூழலுடன் ஒத்துப்போவது, சக மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் மீண்டும் கலந்துறவாடுவது ஆகியவை 11 வயதுக்கு குறைவான மாணவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என மூன்றில் ஒரு பங்கினர் கருதினர்.
இருந்தபோதும், கிருமிப் பரவலால் சில நன்மைகள் விளைந்திருப்பதாக சிலர் கருதுவதாக கருத்தாய்வு குறிப்பிடுகிறது.
குறிப்பாக, கிருமிப் பரவலால் இளையர் களிடையே மின்னிலக்கத் தொடர்பு
முறைகள் மேம்படும் என்று சிங்கப்பூரில் ஐவரில் இருவர் எண்ணுகின்றனர். இப்படி எண்ணுவோரின் விகிதம் உலகளவில் ஐவரில் ஒருவராக உள்ளது.
உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு முதலுதவி தேவைப்படுவது போல பள்ளிகளில் மனநலத்திற்கும் உதவி தேவைப்படுவதாக 'மெண்டல் ஆக்ட்' எனும் மனநல ஆர்வலர் அமைப்பின் நிறுவனரும் சமூக ஊழியருமான டி. தேவானந்தன் தெரிவித்தார்.
"முதலுதவி பயிற்சிக்குச் செல்ல விரும்பும் இளையர்கள் தங்களது பள்ளியை அணுகலாம். மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றால் அவதிப்படும் சக இளையர்களை சில அறிகுறிகளின் வழியாக கண்டுபிடித்து பள்ளியின் மனநல ஆலோசகர்களை அணுகும்படி பரிந்துரைக்கலாம்," என்று அவர் கூறினார்.
விடுமுறை முடிந்து வரும் மாணவர்கள், தங்களை மேலும் நன்கு பராமரிப்பது எப்படி போன்றவை குறித்த உத்திகளைக் கற்கலாம். இதற்கு துணை செய்யும் வகையில் பள்ளிகள் உரிய பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் திரு தேவன் கூறினார்.
- கூடுதல் செய்தி: கி.ஜனார்த்தனன்

