சிரியாவில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதியாதரவு அளித்த பேரில் சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முகம்மது கஸாலி சாலே, 50, காணொளி இணைப்பு வழியாக நீதிமன்றத்தில் முன்னிலையானார். மழித்த தலையுடன் காணப்பட்ட அவர், குற்றச்சாட்டுகள் மலாய் மொழியில் படிக்கப்பட்டபோது எதுவும் கூறாமல் கேட்டுக்கொண்டார். கஸாலி, தமக்கு எதிராகச் சுமத்தப்பட்ட அந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளப்போவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவருக்கு பிணை வழங்காதபடி அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டனர். அவ்வாறே பிணை வழங்கப்படவில்லை. கஸாலியின் வழக்கு அடுத்ததாக ஆகஸ்ட் 11ஆம் தேதி விசாரிக்கப்படும்.

