இர்ஷாத் முஹம்மது
முஸ்கலிம்களின் இருபெரும் விழாக்களின் ஒன்றான ஹஜ்ஜுப் பெருநாள் இன்று சிங்கப்பூரில் கொண்டாடப்படுகிறது. கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் அதிகரித்து வரும் சமூகப் பரவல் சம்பவங்களுக்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் சிங்கப்பூர் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலை நடக்கின்றன.
மொத்தம் 66 பள்ளிவாசல்களில் 18,180 தொழுகை இடங்களுக்கான முன்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. முன்பதிவு செய்து கொண்டோர் மட்டுமே இன்றைய ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளில் கலந்துகொள்ளமுடியும்.
இவ்வாண்டின் தொழுகைக்கான பதிவு, தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து இடங்களும் பதிவு செய்யப்பட்டு விட்டன.
"இது எதிர்பார்த்ததுதான். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகைக்கும் நாங்கள் இவ்வாறு பதிவு செய்கிறோம். பெருநாள் என்றால் இன்னும் ஏராளமானோர் பதிவு செய்வார்கள். நோன்புப் பெருநாள் தொழுகைக்குப் பதிவு செய்தபோது பல தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. இம்முறை சுமூகமாக, எளிமையான முறையில் பதிவு வலைத்தளம் அமைந்தது வரவேற்கத்தக்கது," என்றார் வர்த்தகர் பஷீர் அஹமது.
காலை 7.30 மணி முதல் 8.10 மணி முதல் தொழுகை, காலை 8.40 மணி முதல் 9.20 மணி வரை இரண்டாவது தொழுகை, காலை 9.50 மணி முதல் 10.30 மணி வரை மூன்றாவது தொழுகை என பெரும்பாலான பள்ளிவாசல்களில் மூன்று முறை தொழுகை நடத்தப்படுகிறது.
தொழுகை நடக்கும் பள்ளிவாசல்கள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டன. 47 பள்ளிவாசல்களில் ஒரே ஒரு தொழுகைக் கூடம், அதில் 50 பேர் தொழலாம்.
'மேலும் பாதுகாப்பான பள்ளிவாசல்கள்' என அடையாளம் காணப்பட்ட மீதமுள்ள 19 பள்ளிவாசல்களில் 3 முதல் 5 'ஸோன்' தொழுகைக் கூடங்கள் அமைக்கப்பட்டு வசதி செய்யப்பட்டுள்ளது.
அந்த 'மேலும் பாதுகாப்பான' பள்ளிவாசல்களுக்குச் செல்வோர் முழுமையாகத் தடுப்பூசிப் போடப்பட்டு இரு வாரங்கள் கடந்திருக்கவேண்டும். இல்லை என்றால் நிகழ்வுக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டிருக்கவேண்டும். அல்லது கடந்த 270 நாட்களில் அவர்களுக்குக் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு குணமடைந்திருக்கவேண்டும். இத்தகைய நிபந்தனைகளை நிறைவேற்றியவர்களே தொழுகை மேற்கொள்ள அந்தப் பள்ளிவாசல் களுக்குச் செல்லலாம்.
"இந்த விரிவான வசதியால் கடந்த ஆண்டின் ஹஜ்ஜுப் பெருநாளைவிட இவ்வாண்டு அதிகமான பேர் பள்ளிவாசல்களில் தொழுகை மேற்கொள்ள முடிந்துள்ளது. சமூகப் பரவல் மோசமடைந்து வந்தாலும் பாதுகாப்பான முறையில் பெருநாள் தொழுகையை மக்கள் மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன," என்று கூறினார் லிட்டில் இந்தியாவின் டன்லப் ஸ்திரீட்டில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசல் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு முஹம்மது சித்திக், 37.
"வழக்கமான நிலையில் எவரும் எந்தப் பள்ளிவாசலுக்கும் போகலாம். ஆனால் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும். நடப்பில் உள்ள சட்டத்திட்டங்களை மதித்து அனைவரும் பாதுகாப்பான முறையில் பெருநாளை கொண்டாடுவோம்," என்றார் அவர்.
அப்துல் கஃபூர் பள்ளிவாசல் 'மேலும் பாதுகாப்பான' பள்ளி வாசல் பட்டியலில் உள்ளது. அங்கு மூன்று தொழுகைக் கூடங்களில் மூன்று நேரத்திற்குத் தொழுகை இடம்பெறுகிறது. மொத்தம் 450 பேர் இன்று அங்கு பெருநாள் தொழுகையை மேற்கொள்வர்.
தொழுகைக்குப் பதிவு செய்தவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போடாதவராக இருந்தால் நிகழ்வுக்கு முந்தைய விரைவு பரிசோதனையைச் செய்துகொள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசல் அருகிலுள்ள மருந்தகத்துடன் இணைந்து ஏற்பாடும் செய்துள்ளது.
சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஜாமியா சூலியா பள்ளிவாசலில் 50 பேர் பங்கேற்கக்கூடிய மூன்று தொழுகை நேரங்கள் உண்டு.
நோய்ப் பரவல் சூழலால் பள்ளி வாசல்களில் தொழுகை மேற்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பலர் இருந்தாலும் ஏமாற்றமாக அதைக் கருதாமல் வீட்டில் குடும்பத்தினருடன் தொழுகையை மேற்கொள்ள கிடைத்த அரிய, புனித வாய்ப்பாகக் கருதவேண்டும் என்று கூறினார் ஜாமியா சூலியா பள்ளிவாசலின் நிர்வாகக் குழுத் துணைத் தலைவர் திரு ஷேக் ஃபக்ருதீன், 53.
"ஈதுல் அத்ஹா என்று அழைக்கப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒரு தியாகத் திருநாள். காலத்தின் சூழ்நிலையால் பள்ளிவாசல்களுக்கு வரமுடியாதவர்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பைத் தியாக உணர்வோடு வீட்டில் மனநிறைவோடு கொண்டாடவேண்டும்," என்றார் அவர்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் குர்பான் சடங்கு சிங்கப்பூரில் நடைபெற வில்லை.
ஆஸ்திரேலியாவில் ஆடுகள் குர்பான் செய்யப்பட்டு இறைச்சி மூன்று, நான்கு நாட்கள் கழித்து சிங்கப்பூர் வந்தடையும் என்றும் அவற்றை பதிவு செய்தவர்களின் வீடுகளுக்கு சனிக்கிழமை வாக்கில் விநியோகம் செய்யப்படும் என்று திரு ஃபக்ருதீன் தெரிவித்தார்.
"பள்ளிவாசல்களில் குர்பான் சடங்குக்கான ஆடுகளை வாங்க பதிவு நடைபெற்றது. எங்களுக்குக் கிடைத்த 120 ஆடுகளின் பதிவும் தீர்ந்துவிட்டது," என்றார் அவர்.

