சிரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நிதியுதவி அளித்ததாக சிங்கப்பூர்த் தொழிலதிபர் ஒருவர்மீது மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
முகம்மது கஸாலி சாலே, 50, என்ற அவர்மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தன்மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொள்ள இருப்பதாகவும் தன் சார்பில் வாதாட வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கஸாலிக்குப் பிணை வழங்கக்கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அவருக்குப் பிணை வழங்குவது சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அவரைத் தடுத்து வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அரசுத் தரப்பு குறிப்பிட்டது. இதை அடுத்து, கஸாலிக்குப் பிணை வழங்கப்படவில்லை. அவர்மீதான வழக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.
கடந்த 2013 டிசம்பர் மாதத்திற்கும் 2014ஆம் ஆண்டு தொடக்கப் பகுதிக்கும் இடையில், சிரியாவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் வான் முகம்மது அக்கெல் வான் ஸைனல் அபிதின் என்பவர்க்கு கஸாலி பணம் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறின.
ஒருமுறை, ஜோகூர் பாரு பேருந்து முனையத்தில் அபிதினிடம் 1,000 மலேசிய ரிங்கிட் பணம் கொடுத்ததாக கஸாலிமீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வேறு இரு வேளைகளில் 'வெஸ்டர்ன் யூனியன்' மூலமாக முறையே அவர் 351.75 அமெரிக்க டாலரையும் ஐந்நூறு ரிங்கிட்டையும் அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுக்கும் நோக்கில், கடந்த 2002ஆம் ஆண்டு பயங்கரவாத (நிதி வழங்குதலை ஒடுக்குதல்) சட்டம் இயற்றப்பட்டது. குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றத்திற்கும் கஸாலிக்குப் பத்து ஆண்டுவரை சிறை அல்லது $500,000 வரை அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
கடந்த 2018 டிசம்பரில் மலேசியாவில் கஸாலி கைதுசெய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு நேற்று ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது. அதன்பிறகு அவர் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்குத் துணைநின்றதற்காக 2019 ஜனவரியில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர்மீது தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
சிரியாவில் மிக முக்கியமான ஐஎஸ் போராளியாக இருந்ததாக நம்பப்பட்ட மலேசியாவின் வான் அக்கெல், பின்னர் 2019 மார்ச்சில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. அவருடன் கஸாலி மிக நெருக்கமாக இருந்தார் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டால், கஸாலி மீதான தடுப்புக்காவல் ஆணை அகற்றப்படும் என்றும் அதன்பின் நீதிமன்றம் விதிக்கும் தண்டனையை அவர் அனுபவிப்பார் என்றும் கூறப்பட்டது.

