ரிவர் வேலி ஹை பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவர், சக மாணவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அந்த மாணவர் 18 வயதுக்கு கீழ் இருப்பதால் அவரது பெயர் வெளியிடப்பட இயலாது.
13 வயது மாணவரைக் கழிவறையில் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த மாணவர், காணொளி வழியாக நீதிமன்றத்தில் முன்னிலையானார். திங்கட்கிழமை காலை 11.16 மணிக்கும் 11.44 மணிக்கும் இடையே 13 வயது மாணவர், பள்ளியின் நான்காவது மாடியிலுள்ள கழிவறையில் கொல்லப்பட்டார்.
தலைமுடி அலங்கோலமாக இருந்த நிலையில், சிவப்பு போலோ டி-சட்டையை அணிந்தவண்ணம் முகக்கவசத்துடன் காணப்பட்டார். குற்றச்சாட்டுகள் வாசிக்கப்படும்போது அந்த இளையரின் கண்கள் அங்குமிங்கும் சுற்றின. அவரது பெற்றோர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை.
மனநல கண்காணிப்புக்காக அந்த இளையர் சாங்கி மருத்துவ நிலையத்தில் தடுத்து வைக்கும்படி அரசுதரப்பு வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டனர்.
2019ல் அந்த இளையர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதற்காக மனநலக் கழகத்தில் சோதிக்கப்பட்டார். அங்கு அவர் சில காலம் தங்கி வீடு திரும்பியதாகவும் அவர்கள் கூறினர்.
கொலைக் குற்றம் செய்ததாக உறுதிசெய்யப் பட்டோர் மரண தண்டனையை எதிர்நோக்கலாம். ஆனால் 18 வயதுக்கும் கீழ் இருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்குப் பதிலாக ஆயுள் தண்டனை பெறலாம்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலுள்ள சவக்கிடங்கிற்கு போலிஸ் வாகனம் காலை 8.45 மணிக்கு சென்றது. கறுப்பு உடைகளை அணிந்திருந்த மூவர், பெட்டிகளைத் தூக்கிச் சென்றனர். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது வாகனம் வந்தது.