அண்மைய தொற்றுகளுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் தொடர்பு இல்லை என விளக்கம்
சிங்கப்பூரில் கொவிட்-19 சமூகத்தொற்று அதிகரித்து இருக்கிறது என்றாலும் பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து செயல்படும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
அண்மைய தொற்றுகளுக்கும் பள்ளிக்கூட அடிப்படையிலான தொற்றுக்கும் தொடர்பு இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான திரு வோங் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
"பள்ளிக்கூடங்களைப் பொறுத்த வரை மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளும் அங்கு முழுமையாக இடம்பெறுகின்றன.
"இதன் மூலம் வகுப்பறைகளில் தொற்று கூடுமானவரை குறைக்கப்படுகிறது. பள்ளிக்கூடங்களில் தொற்று இல்லை என்று இவற்றின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது," என்று அமைச்சர் விளக்கினார்.
தொற்று காலத்தின்போது பெரும்பாலும் பள்ளிக்கூடங்கள் திறந்தே இருந்து வந்துள்ளதற்கு இது காரணம் என்றார் அவர்.
மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு நேற்று மெய்நிகர் ரீதியில் செய்தியாளர் மாநாட்டை நடத்தியது.
பள்ளிக்கூடம் மூடப்படுமா என்று ஊடகத்தினர் கேட்டதற்கு அளித்த பதிலில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
உலகின் பல இடங்களிலும் பள்ளிக்கூடங்கள் அதிக காலத்திற்கு மூடப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், அதன் காரணமாக மாணவர்கள் கற்பதிலும் மாணவர்களிடத்திலும் ஒருவித தாக்கமும் ஏற்பட்டு இருப்பதாக பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இதுவரையில் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் மாணவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் காரணமாக பாதிக்கப்பட்டார்களே தவிர பள்ளிக்கூடங்களில் அவர்களுக்குக் கிருமி தொற்றவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆகையால் இப்போதைய காலகட்டத்தில் பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து செயல்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்படுவதை கல்வி அமைச்சு தொடர்ந்து உறுதிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

