சிங்கப்பூரில் ஜூலை 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை கொவிட்-19 பாதுகாப்பு கட்டுப்பாடுகள் கடுமையாகின்றன. இதனால் பாதிக்கப்படக்கூடிய நிறுவனங்கள், ஊழியர்களுக்கு அரசாங்க ஆதரவுத் திட்டத்தின் மூலம் உதவி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கெனவே நடப்புக்கு வந்த இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளின்போது கொடுக்கப்பட்டதைப் போல் புதிய உதவிகள் இருக்கும் என்று பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தது.
நிதி அமைச்சு வரும் வாரங்களில் விவரங்களை அறிவிக்கும்.
நிறுவனங்களின் சங்கடங்களை அரசாங்கம் புரிந்துகொள்கிறது என்றும் பல நடவடிக்கைகளையும் அது மறுபரிசீலனை செய்து இன்னும் இரண்டு வாரங்களில் சரியாக்கங்களைப் பற்றி பரிசீலிக்கும் என்றும் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
எல்லாம் சீராகிவிடும். வியாபாரம் மறுபடியும் தலையெடுக்கும் என்று பல நிறுவனங்கள் நம்பி இருந்த சூழ்நிலையில், எதிர்பாராத விதமாக நிலைமை வேறு மாதிரி யாகிவிட்டது. இதனால் பல நிறுவனங்கள் ஏமாற்றமடைந்துவிட்டன. இதை முற்றிலும் புரிந்துகொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தடுப்பூசி செயல்திட்டத்தைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், நிபந்தனைகளைக் கடுமையாக்குவது என்ற முடிவு சிரமமானது என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தொடர்ந்து தன்னுடைய தடுப்பூசித் திட்டத்தை நிறைவேற்றி வரும் என்றும் பொருளியலைத் திறந்துவிடுவதற்கான திட்டங்களைக் குறித்த நேரத்தில் நிறைவேற்றும் இலக்கை அது எட்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
சிங்கப்பூர் இதற்கு முன் மே 16ஆம் தேதி முதல் ஏறத்தாழ ஒரு மாத காலத்திற்குக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியது.
அதன் காரணமாக அந்தக் காலகட்டத்துக்கு $1.2 பில்லியன் கூடுதல் ஆதரவை அரசாங்கம் வழங்கியது.
அந்த ஆதரவில் சம்பள மானியங்களும் உள்ளடங்கும். கடும் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் முதல் நடுத்தர வருமான ஊழியர்கள் வரை பலரும் தற்காலிக கொவிட்-19 மீட்சி மானியமாக $700 வரை பெற்றனர்.

