சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று சூழ்நிலை காரணமாக புதிய கட்டுப்பாடுகளை நடப்புக்குக் கொண்டு வருவது என்று அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். இதில் அவர்கள் மூன்று அம்சங்களை மிக முக்கியமானதாகக் கருதி பரிசீலித்தனர்.
மருத்துவமனை கொள்ளளவு போதிய அளவுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்; தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் முதியவர்களின் எண்ணிக்கை; சமூகம் எந்த அளவுக்குத் தொற்றுக்கு ஆளாகிறது என்ற நிலவரம் ஆகியவை அந்த மூன்ற அம்சங்கள் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் 70க்கும் மேற்பட்ட முதியவர்களில் ஏறத்தாழ 30 விழுக்காட்டினர் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இது பெரும் கவலையாக இருக்கிறது என்று நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் 60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள ஏறத்தாழ 200,000 மக்கள் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். தொற்று ஏற்படும் பட்சத்தில் இவர்களில் ஏறத்தாழ ஒவ்வொருவருமே மருத்துவமனையை நாட வேண்டி வரும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இவர்களில் 10 விழுக்காட்டினருக்குத் தொற்று ஏற்பட்டால் 20,000 பேர் மருத்துவமனைகளில் சேர்வார்கள். அவர்களில் 10 அல்லது 15 விழுக்காட்டினர் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டிய தேவை ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் விளக்கினார்.

