வேலை இடங்களில் கொவிட்-19 பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக 66 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வேலை இட பாதுகாப்பு நடிவடிக்கைகள் தொடர்பில் 3,500க்கும் மேற்பட்ட தகவல்கள் தனக்குக் கிடைத்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. அவற்றின் அடிப்படையில் அமைச்சு நடவடிக்கை எடுத்தது. இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் மே 16 ஆம் தேதி நடப்புக்கு வந்தன.
அதனையொட்டி வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நடைமுறையை வழக்கமான ஒன்றாக ஆக்கும்படி முதலாளிகள் கேட்டுக்கொள்ளப் பட்டனர். அது முதல் அமைச்சுக்கு அத்தகைய தகவல்களும் புகார்களும் கிடைத்தன.
வீட்டில் இருந்து வேலை பார்க்கக்கூடிய ஊழியர்கள் அவ்வாறே செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் பல நிறுவனங்களும் இப்படி செய்யாததே பொதுவான விதிமீறலாக இருந்ததாக அமைச்சு குறிப்பிட்டது. முதல்தடவை குற்றம் புரிவோருக்கு $1,000 அபராதம் விதிக்க முடியும். மீண்டும் குற்றம் புரிந்தால் அபராதம் $,2000 வரை விதிக்கப்படும்.
அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது ஊழியர்கள் குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அமைச்சு நினைவூட்டியது.
வேலை இடங்களில் சமூக ஒன்றுகூடல்களுக்கு அனுமதி இல்லை. ஊழியர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தனித்தனியாக உணவு உண்ண வேண்டும்.
பொது இடங்களில் கூட்டத்தைக் குறைக்க, குறிப்பாக உச்ச நேரங்களில், பாதுகாப்பு இடைவெளி அடையாளங்கள் தெள்ளத்தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஏற்பாடே இன்னமும் பொதுவானதாக நடப்பில் இருந்து வருகிறது என்பதை முதலாளிகளுக்கு அமைச்சு நினைவூட்டியது.
சிங்கப்பூரில் சமூகத்தொற்று கூடுகிறது. ஆகையால் வேலை இடம் போன்ற பொது இடங்களில் கூட்டத்திற்கு வரம்பு விதிப்பது முக்கியமானதாக, அவசியமானதாக இருக்கிறது என்பதை அமைச்சு சுட்டியது.
வேலை இடத்திற்கு வரவேண்டிய தேவை இருக்கிறதா இல்லையா என்பதை ஊழியர்களிடம் முதலாளிகள் தெளிவாக விளக்க வேண்டும். ஊழியர்கள், தங்கள் கவலையை, அக்கறைகளை முதலாளிகளிடம் தெரியப்படுத்த வேண்டும்.
தொற்றுப் பரவலை முறியடித்து சிங்கப்பூரை பாதுகாப்பாக, நலமிக்கதாக வைத்திருக்க ஒவ்வொரு வரின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை அமைச்சு வலியுறுத்தியது.

