சிங்கப்பூரில் நான்கு சந்தைகளுக்கும் உணவு நிலையங்களுக்கும் சென்றோருக்கு வழங்கப்படும் கொவிட்-19 சுய பரிசோதனை சாதனத்தைப் பெற நேற்றும் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
அச்சாதனத்தைப் பெற நேற்று கடைசி நாள் என்பதால் அதற்கு பெரும்பாலானோர் ஆர்வம் காட்டி னர்.
கடந்த 14 நாட்களில் செங் சான், சோங் பூன், கேலாங் சிராய், ஹேக் ரோடு ஆகிய சந்தை மற்றும் உணவு நிலையங்களுக்குச் சென்றோருக்கு இந்த கொவிட்-19 கிருமி சுய பரி சோதனைச் சாதனம் வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு அருகே வசிக்கும் குடியிருப்பாளர்களும் இச்சாதனைத்தைப் பெறுவோர் எண்ணிக்கையில் அடங்குவர்.
இச்சாதனம் வழங்கும் பணி தீவு முழுவதும் 22 சமூக நிலையங்களிலும் வசிப்போர் குழு நிலையங்களிலும் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த இரு நாள் விநியோகப் பணி நேற்று மாலை 6 மணி அளவில் நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
கேலாங் சிராய் வசிப்போர் குழு நிலையத்தில் இச்சாதனத்தைப் பெற நேற்றுக் காலை 10 மணியளவில் 20 பேர் வரிசையில் நின்றிருந்ததை 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளர் கண்டார்.
சாதனத்தை வழங்கும் பணி ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடங்களில் மிக விரைவாக நடைபெற்றது.
அதனை இலவசமாகப் பெற்றவர்களில் ஒருவரான திரு ராஜு, 76, என்பவர் இரு நாட்களுக்கு முன்னர் ஹேக் ரோடு சந்தை மற்றும் உணவு நிலையத்திற்குச் சென்றிருந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளரிடம் கூறினார். தாம் நல்ல உடல்நிலையை உணர்வதாகக் கூறிய அவர், இரு தடுப்பூசி
களையும் போட்டுக்கொண்டவர்.
உள்ளூரில் கிருமி பரவுவது அண்மையில் அதிகரித்தது. புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் பலரும் சில சந்தைகள் மற்றும் உணவு நிலையங்களுக்குச் சென்று வந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சியாக இவ்விடங்களுக்குச் சென்றோருக்கு இலவச சுய பரிசோதனைச் சாதனம் வழங்கப்பட்டது.

