இந்தோனீசியாவின் பாத்தாம் தீவில் உலகிலேயே ஆகப்பெரிய மிதக்கும் சூரியத்தகடு மேடை அமைக்கப்படவிருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தில் எரிசக்தி நிறுவனமான சன்சீப் குழுமம் கையெழுத்திட்டுள்ளது.
சூரியத்தகடு மேடையோடு மின்சார சேமிப்பு நிலையத்தையும் அந்நிறுவனம் நிறுவுகிறது.
தெற்கு பாத்தாமில் உள்ள டுரியான்காங் நீர்த்தேக்கத்தில் இரண்டு பில்லியன் யுஎஸ் டாலர் மதிப்பிலான சூரிய சக்தி மின்தகடுகள் அமைக்கப்படும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் சன்சீப் தெரிவித்தது.
அடுத்த ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 2024ல் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இத்திட்டத்தை நடைமுறைப் படுத்த உள்ளூர் நிறுவனமான 'BP பாத்தாம்' நிறுவனத்துடன் சன்சீப் ஒப்பந்தம் செய்துள்ளது.
மிதக்கும் சூரியத் தகடு சுமார் 2.2 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சுமார் 1,600 ஹெக்டர் பரப்பளவில் அமைவதால் உலகின் ஆகப்பெரிய மிதக்கும் சூரியத் தகடு ேமடையாக அது இருக்கும்.
அதே வளாகத்தில் கட்டப்படும் எரிசக்தி சேமிப்பு நிலையம் 4,000 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்கும் ஆற்றலை கொண்டிருக்கும்.
சூரியத் தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் ஆண்டுக்கு 1.8 மில்லியன் மெட்ரிக் டன் கரிம வெளியேற்றத்தைத் தடுக்க முடியும். இது, ஆண்டுக்கு 400,000 கார்கள் சாலைகளில் ஓடுவதற்குச் சமமாகும்.