இவ்வாண்டு டிபிஎஸ், யுஓபி, ஓசிபிசி வங்கிகள் வலுவான நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் அவற்றின் ஈவுத் தொகைக்கு விதிக்கப்பட்ட வரம்பு விலக்கப்படுவதைப் பொறுத்து அது அமையும் என்று ஐஎச்எஸ் மார்கிட் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்கிகள் வழங்கும் ஈவுத் தொகைக்கு சிங்கப்பூர் நாணய ஆணையம் வரம்பு விதித்துள்ளது.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வழக்கமான நடைமுறைகள் காரணமாக வங்கிகள் வலுவான மூலதனத்தைப் பெற்றுள்ளன. வங்கிகளின் பொருளியல் எதிர்காலமும் மேம்பட்டுள்ளது.
இதனால் ஈவுத் தொகை மீதான வரம்பை ஆணையம் அகற்றும் என்று தரவுப் பகுப்பாய்வு நிறுவனம் நம்புகிறது.
பங்கு மதிப்பு அதிகரிக்கும் சூழ்நிலையில் 2021 நிதியாண்டில் சிங்கப்பூரின் மூன்று வங்கிகளும் பங்குக்கு 40 விழுக்காடு என்ற விகிதத்தில் ஈவுத்தொகையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டால் வழங்கப்படும் ஈவுத்தொகையின் மொத்த மதிப்பு 5.1 பில்லியன் யுஎஸ் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, 2020ல் 3.6 பில்லியன் யுஎஸ் டாலராக இருந்தது. சிறப்பான சந்தை சூழ்நிலையில் டிபிஎஸ், யுஓபி, ஓசிபிசி வங்கிகள் முறையே பங்குக்கு $1.17, $1,18, $0,52 அளவில் ஈவுத்தொகையை வழங்கும் என ஐஎச்எஸ் மார்கிட் எதிர்பார்க்கிறது.

