இணையத்தில் பெண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்குடள் புத்தாக்க தீர்வுகளைக் கொண்டுவரும் முயற்சியில் 40 குழுக்கள் இறங்கியுள்ளன.
இணையம்வழி மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் போன்றவற்றிலிருந்து பெண்களைப் பாதுகாப்பது முயற்சியின் இலக்கு.
'கம்யூனிட்டி ஹேக்கத்தான்' முயற்சியின்கீழ் சமூக அளவில் மென்பொருள் நிபுணர்கள் ஒன்றுகூடி இணையத்தில் செயல்படுத்தக்கூடிய தீர்வுகளை வரையும் நடவடிக்கையை மேற்கொள்வர்.
'ஏஃப்ஏ' எனப்படும் 'சிங்கப்பூர் டுகெதர் அலயன்ஸ் ஃபார் ஏக்ஷன்' திட்டத்தின்கீழ் இணையம்வழி வரும் அபாயங்களைக் கையாள மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி இது.
'ஏஃப்ஏ' திட்டம், தொடர்பு, தகவல் அமைச்சின் கீழ் வரும். முயற்சியில் ஈடுபட்டுள்ள 40 குழுக்களில் பணியில் இருக்கும் வழக்கறிஞர்கள், அரசாங்க ஊழியர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
தொடர்பு, தகவல் அமைச்சு, 'டிபிஎஸ்' வங்கி, சிங்கப்பூர் நீதித்துறை ஆகியவை இணைந்து 'ஹேக்கத்தான்' முயற்சியை மேற்கொள்கின்றன.
இணையத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதன் தொடர்பில் கடந்த ஆறு மாதங்களாக சமூகத்தினர், தொழில்துறையினர், அரசாங்கம் ஆகிய முத்தரப்பும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்றார் வெளியுறவு, தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சர் சிம் ஆன். முயற்சியில் பங்கேற்பாளர்கள் உற்சாகமாக ஈடுபட்டதுடன் தரமான தீர்வுகளையும் முன்வைத்ததை அவர் சுட்டினார்.
அதைக் கண்டு தாம் மகிழ்ச்சியடைந்ததாக இணைய அபாயங்களைக் கையாள்வதற்கான 'ஏஃப்ஏ' திட்டத்தின் தலைவர்களில் ஒருவருமான அவர் சொன்னார்.
பங்கேற்பாளர்கள் தங்கள் தீர்வுகளை வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். பின்னர் அக்டோபர் மாதம் ஏழாம் தேதியன்று நீதிபதிகளின் முன்னிலையில் அவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.
அம்மாதம் 28ம் தேதியன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

