தோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளைக் கொண்டாடும் வகையில் சிங்போஸ்ட் ஆறு அஞ்சல் தலைகளை வெளியிடுகிறது.
ஒலிம்பிக்கில் சிங்கப்பூர் பங்கேற்கவுள்ள சில விளையாட்டுகளைச் சித்திரிக்கும் ஓவியங்கள் அஞ்சல் தலைகளில் இடம்பெறும். நீச்சல், முக்குளிப்பு, பூப்பந்து உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒலிம்பிக் கருப்பொருளைக் கொண்ட அஞ்சல் தலைகளை வாங்கலாம். அவற்றின் விலை 30 காசுக்கும் 1.40 வெள்ளிக்கும் இடைப்பட்டிருக்கும்.
அனைத்து தபால் நிலையங்கள், அஞ்சல் தலை கடைகள், சிங்போஸ்டின் இணையத்தளம் ஆகியவற்றில் அஞ்சல் தலைகளை வாங்கலாம்.
வரும் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறும். சென்ற ஆண்டு நடைபெறவிருந்த விளையாட்டுகள், கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுகளை வரலாற்றில் இரண்டாவது முறையாக ஏற்று நடத்துகிறது ஜப்பான்.
ஏற்கெனவே 1964 ஒலிம்பிக் விளையாட்டுகள் அங்கு அரங்கேறின.
18வது முறையாக ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ளது சிங்கப்பூர்.
சென்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பூர் தங்கம் வென்றது.
100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் ஜோசஃப் ஸ்கூலிங் சிங்கப்பூருக்குத் தங்கம் வென்றார்.

