சிங்கப்பூர் இரண்டாம் கட்ட (அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலை) நடைமுறைக்குத் திரும்ப கேடிவி கேளிக்கைக்கூட கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையோரின் பொறுப்பற்ற நடத்தை கராணமல்ல என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்ட திரு ஓங், மற்றவர்களைப்போல தாமும் அவர்களின் செயலுக்காக வருத்தமடைவதாகச் சொன்னார்.
ஆயினும், கேடிவி கிருமித்தொற்றுக் குழுமத்தைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று கொவிட்-19 கிருமிப் பரவலை எதிர்கொள்ளும் அமைச்சுகள்நிலைப் பணிக்குழு எண்ணியது.
தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டும் உணவுக் கடைகளில் அமர்ந்து உண்ண அனுமதி அளிக்க பணிக்குழு முடிவெடுத்திருந்தது.
இப்போது மீண்டும் பழைய கட்டுப்பாடுகளுக்குத் திரும்பியதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் ஒருசிலர் செய்த தவறுகளுக்காக அனைவருமே விளைவுகளை அனுபவிக்க வேண்டுமா என்றும் வாட்ஸ்அப்பில் உள்ள தமது நண்பர்கள் உள்ளிட்ட சிலர் தம்மிடம் வினவியதாக அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு ஓங் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக கேடிவி குழுமத்தில் ஏற்பட்டுள்ள கிருமித்தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதை அவர் சுட்டினார்.
மாறாக, இரண்டாம் கட்டக் கட்டுப்பாடுகளுக்குத் திரும்பியதற்கு ஜூரோங் மீன்பிடித் துறைமுகக் கிருமித்தொற்றுக் குழுமமே காரணம் என்று திரு ஓங் தெரிவித்தார்.
"நேர்மையான முறையில் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த மீன்கடைக்காரர்களும் கடை உதவியாளர்களும் துறைமுகத்தில் கிருமித்தொற்றுக்கு உள்ளாகினர். பல்வேறு சந்தைகளுக்கு அவர்கள் சென்று வேலை பார்த்ததில் சமூகத்தில் மேலும் பலரைக் கிருமி தொற்றியது," என்று திரு ஓங் கூறினார்.
இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூத்தோர் பலர் சந்தைகளுக்குச் சென்றதை அவர் சுட்டினார்.
"இதுதான் அதிக கவலை அளிக்கக்கூடியது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கிருமித்தொற்று கூடும் அபாயத்தை நாம் எதிர்நோக்குகிறோம்," என்று அவர் எச்சரித்தார்.
"எனவே நாம் முன்கூட்டியே சமூக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்," என்று திரு ஓங் கூறினார்.
உணவுக்கடைகளில் இதுவரை எவருக்கும் கிருமித்தொற்று ஏற்படாத நிலையில், அங்கு அமர்ந்து உணவருந்துவதற்குத் தடை விதித்துள்ளதற்கான காரணம் குறித்தும் ஓர் எடுத்துக்காட்டு மூலம் திரு ஓங் விளக்கினார்.
"உணவருந்த ஐந்து பேர் ஒன்றாக சந்திக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஐந்து பேர் இருக்கிறார்கள். அந்த ஐவரும் ஐந்து நண்பர்களைச் சந்திக்கிறார்கள். இதன் மூலம் 125 பேரிடம் கிருமி பரவுவதற்கான சாத்தியம் ஏற்படுகிறது," என்று திரு ஓங் எடுத்துரைத்தார்.
"இதன் மூலம் ஜூரோங் மீன்பிடித் துறைமுகக் கிருமித்தொற்றுக் குழுமம் மிக வேகமாகப் பெருகிவிடும்," என்று எச்சரித்தார் அவர்.
மக்கள்தொகையில் 50 விழுக்காட்டினர் ஏற்கெனவே தங்களது இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டதாக திரு ஓங் சுட்டினார்.

