நான்கு ஆண்டு காலகட்டத்தில் ஏறத்தாழ $1.8 மில்லியன் மதிப்பிலான பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பு செய்ய 35 வயது ஆடவர் ஒருவர் தமது நிறுவனத்திற்கு உதவியதாக கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் வரி ஏய்ப்பு தொடர்பில் சேஃப்டி மரின் மேனேஜ்மண்ட் நிறுவனத்தின் ஒரே பங்குதாரரும் அதன் இயக்குநருமான லாவ் ஸென் ஸொவ் மீது இன்று (ஜூலை 23) 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்த நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி தொடர்பில் 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் பொய்த் தகவல்களை லாவ் அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
2018 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணைய கணக்குத் தணிக்கையாளர்களிடம் பொய்த் தகவல்கள் அளித்ததாகவும் லாவ் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
லாவ் $150,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 20ஆம் தேதி அவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.