சமூகத் தொற்றுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து சிறிய, நடுத்தர நிறுவனங்களை நடத்துவோர் வாடகை செலுத்த கூடுதல் உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
வர்த்தகக் கட்டடங்களில் நிறுவனம் நடத்தும் தகுதியுள்ளோருக்கு இந்த உதவி கிட்டும்.
ஆண்டு வருவாய் $100 மில்லியனுக்கு மிகாத சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கமற்ற அமைப்புகள் இந்த வாடகை நிவாரணத்திற்குத் தகுதிபெறும் என நிதி அமைச்சு இன்று தெரிவித்தது.
அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தகக் கட்டடங்களில் நிறுவனம் நடத்தும் தகுதியுள்ள வாடகைதாரர்கள் நான்கு வார வாடகைத் தள்ளுபடியைப் பெறுவர்.
அதேநேரம், தனியார் வர்த்தகச் சொத்துகளில் இருக்கும் தகுதியுள்ள வாடகைதாரர்கள் மற்றும் நிறுவனம் நடத்துபவர்கள் வாடகை ஆதரவுத் திட்டத்தின்கீழ் இரு வார வாடகை ரொக்க நிவாரணம் பெறுவர்.
இந்த வாடகை நிவாரண நடவடிக்கைகள் இன்று முன்தினம் தொடங்கி ஆகஸ்ட் 18 வரை நீடிக்கும் இரண்டாம் கட்ட உயர் விழிப்புநிலை கட்டுப்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிக்கட்ட உதவும். அரசாங்கக் கட்டடங்களில் இருப்போருக்கு இந்த நான்கு வார காலத்திற்கு முழுமையான வாடகைக் தள்ளுபடியையும் தனியார் கட்டடங்களில் இருப்போர் கட்டுப்பாட்டு காலத்தின் பாதி அளவுக்கு, அதாவது இரு வாரங்களுக்கான வாடகை உதவியையும் பெறுவர்.
கடுமையாகப்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளால் பாதிக்கப்படும் வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவும்பொருட்டு இன்று அறிவிக்கப்பட்ட $1.1 பில்லியன் ஆதரவுத் திட்டத் தொகுப்பின் ஒரு பகுதி இந்த வாடகை நிவாரணம்.
இதற்கு முன்னர், இவ்வாண்டு மே 16 முதல் ஜூன் 13 வரையில் இரண்டாம் கட்ட விழிப்புநிலைக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோதும் இதேபோன்ற வாடகை உதவித் தொகை வழங்கப்பட்டது.
கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் கட்டங்களில் பாதிக்கப்படும் வர்த்தகங்களுக்கு வாடகை உதவி அளிக்குமாறு வர்த்தகக் கட்டடங் களின் உரிமையாளர்களை அரசாங்கம் ஊக்குவித்தபோதிலும் மிகச் சிலரே அவ்வாறு செய்வதாக பல்வேறு வாடகைதாரர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு இருப்பதாக நிதி அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
அதேநேரம் சிரமங்களை எதிர்நோக்கும் கட்டட உரிமையாளர்கள் இருப்பதையும் அவர்களின் நிலைமையையும் பரிசீலிக்க வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டி உள்ளதாக அமைச்சு கூறியுள்ளது