என்இஏ நடத்தும் நிலையங்களில் கடை நடத்துவோருக்கு ஒருமுறை $500 ரொக்கம்
உணவங்காடி நிலையங்களிலும் ஈரச்சந்தைகளிலும் கடை நடத்துவோர் கடுமையாக்கப்பட்டு உள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளால் பாதிப்புறா வண்ணம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) நடத்தும் உணவங்காடி நிலையங்களில் கடை வைத்திருப்போர் ஒருமுறை வழங்கப்படும் $500 ரொக்கம் பெறுவார்கள் என நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஈரச்சந்தை மற்றும் உணவங்காடி நிலைய நிவாரண நிதியிலிருந்து அவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். தேசிய சுற்றுப்புற வாரியத்தால் நியமிக்கப்பட்ட கடைக்காரர்களும் இந்த உதவிக்குத் தகுதி பெறுவர்.
சமூகத்தில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் உணவுக் கடைகளில் அமர்ந்து சாப்பிடத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், கடைக்காரர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஓரளவு சரிக்கட்டும் விதமாக ரொக்க உதவித் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ஏற்கெனவே நடப்பில் உள்ள உதவிகளுக்குக் கூடுதலாக இடம்பெறுகிறது. கட்டுப்பாடுகளால் உணவங்காடி நிலையக் கடைக்காரர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில் ஒரு மாத வாடகைத் தள்ளுபடி, மேசையை சுத்தம் செய்தல் மற்றும் ஒரு
நிலைப்படுத்தப்பட்ட பாத்திரம் கழுவும் சேவைகள் ஆகியவற்றுக்கான கட்டணத்தில் சலுகை போன்றவை இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தன. மொத்தமாக, இத்தகைய கடைக்காரர்களுக்கு கடந்த ஆண்டு முதல் எட்டு மாத வாடகைத் தள்ளுபடியும் ஆறு மாதக் கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டு உள்ளன.
உணவங்காடி நிலையக் கடைக்காரர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் தொடர்பான மேல்விவரங்களை தேசிய சுற்றுப்புற வாரியம் பின்னர் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் தவிர, மீண்டும் உணவு விநியோகத்துக்கு மாறியுள்ள உணவு, பான வர்த்தகங்களும் சலுகைகளைப் பெற உள்ளன. எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் தயாரித்துள்ள உணவு விநியோக ஊக்குவிப்பு உதவித்தொகுப்பின் கீழ் உணவு விநியோகக் கட்டணத்தில் அவற்றுக்குச் சலுகை வழங்கப்படும். இதற்கு முன்னர், இவ்வாண்டு மே 16 முதல் ஜூலை 15 வரை நடப்பில் இருந்த இந்த உதவித் தொகுப்பு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை இச்சலுகை அளிக்கப்படும். உணவு விநியோகத் தளங்கள் வசூலிக்கும் தரவுத் தொகையின் ஐந்து விழுக்காட்டு புள்ளிகளுக்கு எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு நிதி ஆதரவு வழங்கும். அதேபோல மூன்றாம் தரப்பு தளவாட பங்காளிகளைப் பயன்படுத்தும் வர்த்தகங்களுக்கான விநியோகச் செலவில் 20 விழுக்காடு வரையான ஆதரவையும் அது வழங்கும்.
இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள உதவிகள் பற்றி நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தமது கருத்துகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
"கொவிட்-19 சூழலால் வாடிக்கையாளர்கள் குறைந்து, மோசமாகப் பாதிக்கப்படும் கடைக்காரர்களுக்கு உதவி செய்ய நாம் கடப்பாடு கொண்டுள்ளோம். மூத்தோர் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் அடிக்கடி செல்லும் இடங்களான நமது ஈரச்சந்தைகளும் உணவங்காடி நிலையங்களும் கிருமித்தொற்று பரவும் அபாயத்தை அதிகமாகக் கொண்டுள்ளன. எனவே, சிறந்த முறையில் தொடர்புத் தடங்களை அறியும்பொருட்டு இந்த இடங்களில் சேஃப்என்ட்ரி பதிவுமுறையும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன," என்று அவர் தெரிவித்துள்ளார்.