சிங்கப்பூரில் சமூக அளவில் நேற்று புதிதாக 130 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 78 பேர் ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத் தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு கூறியது.
இந்தப் புதிய எண்ணிக்கையையும் சேர்த்து இந்தத் தொற்றுக் குழுமத்தில் இதுவரை 638 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் ஆகப்பெரிய கிருமித்தொற்றுக் குழுமமாக இது உருவெடுத்து வளர்ந்து வருகிறது.
மற்றொரு குழுமமான கேடிவியுடன் தொடர்புடைய ஆறு பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து இந்தக் குழுமத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 227க்கு அதிகரித்துள்ளது.
மொத்தம் 130 பேரில் 64 பேர் இதற்கு முன்னர் கிருமி தொற்றியவர்களோடும் தனிமை உத்தரவில் இருந்தவர்களோடும் தொடர்பில் இருந்தவர்கள். இதர 37 பேரின் தொற்று தொடர்பு கண்காணிப்புச் சோதனை மூலம் கண்டறியப்பட்டது. அதேவேளை எந்தத் தொடர்பும் இல்லாத வகையில் கிருமி தொற்றியதாக நேற்று 29 பேர் ஆறிவிக்கப்பட்டனர்.
மேலும், நேற்று அறிவிக்கப்பட்டவர்களில் 70 வயதைக் கடந்த இரு மூத்தோர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை அல்லது ஓர் ஊசி மட்டும் போட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. மூத்தோர் கிருமித்தொற்றுக்கு எளிதில் சிக்கும் ஆபத்துடையவர்கள்.
உள்ளூரில் கிருமி தொற்றியோர் தவிர வெளிநாடுகளில் இருந்து வந்த மூவருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
இங்கு வந்தது முதல் தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களிடம் தொற்று உணரப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
புதியவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63,924க்கு அதிகரித்துள்ளது.