ஆகஸ்ட் 31 வரை தினமும் $10; அதன் பின்னர் $5 பெறுவர்
ஆக அண்மைய கொவிட்-19 கட்டுப்பாடுகளின் தாக்கத்தைத் தணிக்கும் பொருட்டு டாக்சி ஓட்டுநர்களுக்கும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கும் செப்டம்பர் இறுதி வரை கூடுதல் நிதி உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டாம் கட்ட உயர் விழிப்பு நிலைக் கட்டுப்பாடுகள் அறிமுகமான ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் ஒவ்வொரு ஓட்டுநரும் ஒவ்வொரு வாகனத்திற்கும் நாள் ஒன்றுக்கு $10 கூடுதலாகப் பெறுவார்கள் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
செப்டம்பர் மாதத்திலும் உதவி தொடரும் என்றபோதிலும் அது பாதியாக, அதாவது $5 ஆகக் குறைத்துத் தரப்படும்.
மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 ஓட்டுநர் நிவாரண நிதிக்கு அரசாங்கம் $30 மில்லியனைக் கூடுதலாக வழங்கும்.
ஓட்டுநர்கள் தங்களுக்கான நிவாரணத் தொகையை தங்களின் டாக்சி, தனியார் வாடகை கார் நிறுவனங்கள் மூலம் பெறுவர். இதற்காக அவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிவாரணத் தொகை தற்போது ஓட்டுநர்கள் பெற்றுவரும் நிவாரணத் தொகையில் இரட்டிப்பாகும்.
இதற்கு முன்னர் ஜூன் மாதத்திலும் இதேபோன்ற நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஓட்டுநர்கள் ஒவ்வொரு நாளும் வாகனம் ஒன்றுக்கு $10 வீதம் 60 நாள்களுக்கு நிவாரணத் தொகை பெறுவர்.
இம்மாதம் தொடங்கி செப்டம்பர் வரை $5 நிவாரணத் தொகை தரப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் துறைகளுக்கு ஆதரவு வழங்க கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் மொத்தம் $482 நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 18 வரை நடப்பில் இருக்கும் இரண்டாம் கட்ட உயர் விழிப்புநிலைக் கட்டுப்பாடுகளின் போது டாக்சி மற்றும் தனியார் வாடகை கார்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்
படுவதால் இந்தக் கூடுதல் உதவி வழங்கப்படுவதாக அது கூறியது.
"மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் நிவாரண நிதித் திட்டத்தை அமல்
படுத்த டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் நிறுவனங்களுடன் இைணந்து அடுத்த இரு வாரங்களுக்கு ஆணையம் பணியாற்றும்.
"இந்த நிவாரண உதவியைப் பெற்றுக்கொண்ட ஓட்டுநர்கள் பற்றிய விவரங்களை அந்நிறுவனங்கள் உரிய காலத்தில் தெரிவிக்கும்," என ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கொவிட்-19 தொற்றியோருடன் அணுக்கத் தொடர்பில் இருந்ததன் காரணமாக தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஓட்டுநர்கள் சுகாதார அமைச்சின் தனிமை உத்தரவு உதவித் திட்டத்தின் வாயிலாக தொடர்ந்து உதவி பெறுவர் என்றும் அது தெரிவித்துள்ளது.