ரிவர் வேலி ஹை பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பெற்றோருக்கும் சமூகத்தினருக்கும் இருக்கக்கூடிய அச்சங்களுக்குப் பதிலளிக்க கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வரும் வாரம் நாடாளுமன்றத்தில் பேசுவார்.
பள்ளிகளுக்கு ஆதரவு அளிப்பது, உதவி தேவைப்படும் மாணவர்களை எப்படி கவனித்துக்கொள்வது ஆகியவற்றின் தொடர்பில் பெற்றோருக்கும் சமூகத்தினருக்கும் சில ஐயங்கள் உள்ளன.
அவை புரிந்துகொள்ளக்கூடியவை எனத் திரு சான் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
சவாலாக இருந்த இந்த வாரத்தை சமூகம் ஒன்றுபட்டு எதிர்கொண்டதை அவர் குறிப்பிட்டார்.கடந்த திங்கட்கிழமையன்று ரிவர் வேலி ஹை பள்ளியைச் சேர்ந்த 13 வயது மாணவரை கொன்றதாக 16 வயது நிரம்பிய சக பள்ளி மாணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டு மாணவர்களும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அதனால் அவர்களின் பெயர்களையும் அடையாளத்தையும் வெளியிடத் தடை உள்ளது.
சம்பவம் நிகழ்ந்தபோது இதர மாணவர்களைப் பாதுகாக்க உடனடியாகத் தகுந்த நடவடிக்கையை எடுத்த பள்ளியின் ஆசிரியர்களையும் ஊழியர்களையும் பாராட்டினார் அமைச்சர் சான்.
மனநல ஆதரவு தேவைப்பட்டால் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் அல்லது மனநல ஆலோசகர்களை நாடலாம் என்று சிங்கப்பூரில் உள்ள மற்ற பள்ளிகளும் தங்களின் மாணவர்களிடம் கூறியுள்ளன.
சம்பவம் நிகழ்ந்த ரிவர் வேலி ஹை பள்ளியில் 12லிருந்து 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

