மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் இளையர்களுக்கு உதவ பெற்றோர், பள்ளிகள், சமுதாயம் ஆகிய முத்தரப்புக்கும் போதுமான அனுபவம் இல்லை என்று அதிபர் ஹலிமா யாக்கோப் ஃபேஸ்புக் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இளையர்களை நன்கு புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு வழங்கக் கூடுதல் முயற்சி எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மனநலப் பிரச்சினைக்கு ஆளாகும் பெரியோரைவிட இளையர்கள்தான் மிக மோசமாக பாதிக்கப்படுவர் என்பதைத் திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமையன்று ரிவர் வேலி ஹை பள்ளியில் 16 வயது மாணவர் ஒருவர் 13 வயது மாணவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுவதையொட்டி அதிபர் இதைச் சட்டினார்.
தற்கொலை முயற்சிக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட 16 வயது மாணவர், மனநல சிகிச்சை பெற ஈராண்டுக்கு முன் தேசிய மனநலகக் கழகத்திற்கு அனுப்பப்பட்டது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டால் அவர் உதவி கேட்டு கதறுகிறார் எனப் பொருள் என்றார் அதிபர்.
சம்பந்தப்பட்ட மாணவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த பிறகு தொடர்ந்து மனநல சிகிச்சை பெற்றாரா அல்லது அதன் தொடர்பில் மருந்து உட்கொண்டாரா போன்ற விவரங்கள் தெரியவில்லை என்று அவர் சொன்னார்.
அவரின் நிலைமைக்குக் காரணம் பள்ளி விவகாரங்களா அல்லது அவருக்கு வேறேதும் பிரச்சினை இருந்ததா என்பதும் தெரியவில்லை.
மனநலப் பிரச்சினை ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம் எனத் திருவாட்டி ஹலிமா சுட்டினார்.
பெற்றோர், பள்ளிகள், சமுதாயம் ஆகிய முத்தரப்புக்கும் இந்தச் சிக்கலை சரிவரக் கையாளத் தெரியவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
வளரும்போது உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களால் சிறுவர்கள் தவறாக நடந்துகொள்ள வாய்ப்புள்ளது.
அது பெற்றோர் புரிந்துகொள்ளாமல் இருக்கக்கூடும்.
ஏற்கெனவே வேலையில் மூழ்கியிருக்கும் ஆசிரியர்களால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மாணவரும் எதிர்நொக்கும் சவால்களைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். சமுதாயமும் இளையர்கள் மீது, அதிலும் குறிப்பாக கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மீது, அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வைக்கிறது என்றார் அதிபர் ஹலிமா.
மனநலப் பிரச்சினை என்றால் எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் எனப் பெற்றோரிடையே இருக்கக்கூடிய மனப்போக்கு போன்ற சிக்கல்களையும் திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார். மனநலப் பிரச்சினையைப் பற்றி சமுாயத்தில் இன்னமும் தவறான கண்ணோட்டம் இருப்பதையும் அவர் எடுத்துச் சொன்னார்.
மனநலப் பிரச்சினைகள் உள்ள மாணவர்களுக்கு உதவ பள்ளிகளுக்குக் கூடுதல் வளங்களும் ஆதரவும் தேவை என்று அவர் கூறினார்.