தங்களது மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்துவதுடன் தொழில்நுட்ப, கட்டடச் சூழல் தொழில்துறைகளில் வேலையில் சேர விரும்புவோர் இரு புதிய பாடப்பிரிவுகளில் சேர முடியும்.
எஸ்ஜியுனைடெட் வேலை, திறன் தொகுப்புத் திட்டத்தின்கீழ் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு இரு பாடப்பிரிவுகளை வழங்கவிருக்கிறது. தொழில்துறைக்கு ஏற்புடைய பயிற்சி வாய்ப்புகளை ஊழியர்களுக்கு இந்தப் பாடப்பிரிவுகள் வழங்கும் என்று அந்த அமைப்பு நேற்று தெரிவித்தது. சிங்கப்பூரர்களுக்காக வேலை வாய்ப்புகளையும் திறன் பயிற்சியையும் வழங்க இந்தத் தொகுப்புத் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
தொழில்நுட்ப, மின் வணிக துறைகளில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் மூன்று மாதகால தொழிற்பயிற்சியிலும் பங்கேற்பாளர்கள் ஈடுபடுவர்.
இத்தகைய வேலைப் பயிற்சிகள் மூலம் சட்ட விவகாரங்கள், தரவு ஆளுமை உள்ளிட்ட அம்சங்களில் அனைத்துலகமய திறன்களைப் பெறுவதுடன் பங்கேற்பாளர்கள் தங்களது அடித்தளத்தையும் வலுப்படுத்த முடியும்.
தொழிற்பயிற்சியை முடித்தவுடன் அதே நிறுவனத்தில் அவர்களுக்கு வேலை வழங்கப்படலாம்.
இந்தப் பாடப்பிரிவின் மூலம் வேலை தேடும் பணியிடைக்கால ஊழியர்கள் 50 பேர் வரை பலன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மானியங்கள் போக இந்தப் பாடப்பிரிவுகளுக்கு ஆகும் செலவு $500. பங்கேற்பாளர்கள் தங்களுடைய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகையைக் கொண்டு இதற்குக் கட்டணம் செலுத்தலாம். அவர்களுக்கு மாதாந்திர பயிற்சி படித்தொகையாக $1,200 வழங்கப்படும்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மாதத்தின் ஒரு பகுதியாக வெஸ்ட்கேட் கடைத்தொகுதியில் நடைபெறும் வேலை, திறன் காட்சியை கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் நேற்று பார்வையிட்டார்.
இந்த ஐந்து நாள் நிகழ்வு வரும் செவ்வாய்க்கிழமை நிறைவுபெறுகிறது. வாழ்க்கைத்தொழில் ஆலோசனை, நேர்முகத் தேர்வு, இணையக் கருத்தரங்குகள் என மெய்நிகர் வழியாகவும் நேருக்கு நேரும் நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறுகின்றன.