சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய முன்னாள் வரவேற்பாளர் ஒருவர், தமக்கு இருந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மூன்று ஆண்டுகளில் கட்சிக்காரர்களிடம் இருந்து $140,000க்கும் மேலான தொகையை தவறாக கையாண்டார்.
நூர்ஃபர்ஹானா சஸ்வானி அப்துல் சமத் எனும் அந்த 27 வயது பெண்ணுக்கு நேற்று ஓராண்டு 11 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நம்பிக்கை மோசடி செய்ததாக தம்மீது சுமத்தட்ட குற்றச்சாட்டை முன்னதாக அவர் ஒப்புக்கொண்டார்.
2013 முதல் 2019 ஜூலை 31ஆம் தேதிவரை 'கெல்கோ' சட்ட நிறுவனத்தில் நூர்ஃபர்ஹானா பணியாற்றியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
குற்றவியல் வழக்குகளுக்காக கட்சிக்காரர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பது, சட்டச் சேவைக்கான விலைப் பட்டியலை தயார்செய்வது, கட்சிக்காரர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பது உள்ளிட்டவை அவரது கடமைகளில் அடங்கும்.
2016 ஆகஸ்ட்டிற்கும் 2019 ஜூலைக்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டு காலத்தில் 201 பரிவர்த்தனைகளில் கட்சிக்காரர்களிடம் இருந்து பெற்ற ரொக்கத்தைக் கையாண்டு முறைகேட்டில் ஈடுபட்டார்.
நூர்ஃபர்ஹானா மொத்தம் $148,290ஐ முறைகேடாக கையாண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
துணிமணிகள், மளிகைப் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட தனிப்பட்ட செலவுகளுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.