முன்னோடித் தலைமுறை உறுப்பினர் அட்டைகளை வைத்திருப்போர் சார்பில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் பொருட்கள் வாங்கி விலைக் கழிவு பெறலாம் என்று ஃபேர்பிரைஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய கொவிட்-19 சூழலில் மூத்தோர் வீட்டிலேயே இருப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
மூன்று விழுக்காடு விலைக் கழிவைப் பெற, ஃபேர்பிரைஸ் அல்லது யூனிட்டி கடைகளில் வாடிக்கையாளர்கள் தங்களது குடும்ப உறுப்பினரின் முன்னோடித் தலைமுறை அட்டையைக் காட்ட வேண்டும்.
திங்கட்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் இந்த விலைக் கழிவு பொருந்தும்.
வரும் திங்கட்கிழமை முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தங்களது குடும்ப உறுப்பினர்கள் சார்பில் பொருட்கள் வாங்கி இந்த விலைக் கழிவைப் பெறலாம்.
ஜூரோங் மீன்பிடித் துறைமுக கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடைய பல்வேறு ஈரச்சந்தைகளில் பலரிடம் கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது.
இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூத்தோர் தற்போதைய சூழலில் முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு கிருமித்தொற்றை எதிர்கொள்ளும் அமைக்சுகள்நிலைப் பணிக்குழு அண்மையில் அறிவுறுத்தியிருந்தது.
"எழுபது வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் பலர் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதது எங்களுக்குக் கவலைக்குரியதாக உள்ளது," என்று ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியன் பெங் கூறினார்.
"மூத்தோருக்குப் பணத்தை மிச்சப்படுத்த உதவுவதற்கு அப்பாற்பட்டு, தனியாக வசிக்கும் மூத்தோரைச் சென்று பார்த்து அவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவதை இத்திட்டம் ஊக்குவிக்கிறது," என்றும் அவர் சொன்னார்.
நாள் ஒன்றுக்கு ஒரே பரிவர்த்தனையில் $200 வரை பொருட்கள் வாங்கும்போது இந்த 3 விழுக்காடு விலைக் கழிவு பொருந்தும் என்று ஃபேர்பிரைஸ் நிறுவனம் தெரிவித்தது.