சிங்கப்பூரில் ரொக்கமில்லாப் பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதால் இளையர்கள் கூடுதல் செலவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட்-19 நெருக்கடி நிலையின்போது மின்னிலக்க ரீதியில் கட்டணம் செலுத்தும் முறை அதிகரித்திருப்பதால் இந்த நிலை அதிக கவலை தரும் ஒன்றாகக் கூறப்படுகிறது.
பேவேஃப், பேநவ், கடன் அட்டை போன்ற தளங்களைப் பயன்படுத்தி மேலும் அதிகமான இளையர்கள் பொருட்கள் வாங்கு கிறார்கள். கட்டணம் செலுத்து கிறார்கள் எனத் தெரிகிறது.
18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட வாடிக்கையாளர்கள் பலர் ரொக்கமில்லாப் பரிவர்த்தனைகளுக்கு மாறியிருப்பதை டிபிஎஸ் வங்கி சுட்டியது.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான தரவுகளை ஆராய்ந்தபோது இதுகுறித்து தெரியவந்ததாக அது கூறியது.
ரொக்கமில்லாப் பரிவர்த்தனை இப்பிரிவினர்களிடையே 60 விழுக்காடு கூடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
"மின்னிலக்கத் தளம் வாயிலாக பணம் செலுத்தும்போதும் பொருட்கள் வாங்கும்போதும் வாடிக்கையாளர்கள் ரொக்கத்தை நினைத்துப் பார்ப்பதில்லை.
இதனால் தாங்கள் செலவிடும் தொகையை அவர்கள் குறைத்து மதிப்பிடும் சாத்தியம் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
"இதன் விளைவாக அவர்கள் கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்படக்கூடும்," என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஆங் சுவீ ஹூன் கூறினார்.