'கேம்பஸ்இம்பாக்ட்' என்ற சமூகச் சேவை அமைப்பு, ஈசூனில் புளோக் 151ல் செயல்படும் தனது நிலையத்தில் இளையர்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்க இருக்கிறது.
சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் வழங்கிய $200,000 உதவியுடன், அந்த அமைப்பின் புதிய 'ரூம் டு குரோ' என்ற இடவசதி நேற்று தொடங்கப்பட்டது. அந்த 163 சதுர மீட்டர் விரிவாக்கம், ஓவியம், நடனம், நாடகம், விலங்குகள் உதவியுடன் கூடிய இணையக் கலந்துறவாடல்கள் போன்றவற்றின் வழியாக 7 முதல் 17 வயது வரைப்பட்ட இளைஞர்களுக்கு உடல், மனநலச் சேவைகளை வழங்கும்.
குடியிருப்பாளர்கள் தொலைபேசி மூலம் அல்லது நேரடியாகச் சென்று தங்களுக்கு என்ன வகை சேவை தேவைப்படுகிறது என்பதை முடிவு செய்து கொள்ளலாம.
கேம்பஸ்இம்பாக்ட் அமைப்பு ஈசூன் ஸ்திரீட் 11ல் ஏழு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
பொதுவாக இந்தச் சேவைகளுக்கான கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு $130 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். இருந்தாலும் $4,500 மற்றும் அதற்கும் குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மானியங்கள் உண்டு. ஒவ்வொருவரையும் பொறுத்து அதிக மானியங்கள் பெறவும் முடியும்.
உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம், நேற்றைய தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அடுத்த தலைமுறைக்கு ஆற்றல்மிக்க சமூகச் சேவைகளை வழங்குவதற்குத் தோதாக தன் முயற்சிகளை இந்த அமைப்பு தீவிரப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.
"இத்தகைய சேவைகளின் உதவியுடன் நம்முடைய சிறார்களும் குடும்பத்தாரும் மீள்திறனை வளர்த்துக்கொண்டு இன்றைய சவால்களை மட்டுமின்றி எதிர்கால சவால்களையும் சமாளித்து மீண்டு வர முடியும்," என்று துணை அமைச்சர் கூறினார்.
புதிய விரிவாக்கத்தில் பயிலரங்குகள், விளையாட்டுகள், குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகள் போன்றவையும் இடம்பெறும்.