கொவிட்-19 தொற்று காரணமாக வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் கலாசாரம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நன்மை கைகூடி இருக்கிறது. வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கலாம் என்பதால் தங்கள் பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்க பல தாய்மார்களுக்கு அதிக நேரம் கிடைக்கிறது.
“கொவிட் தொற்று இல்லை எனில் என் நிறுவனம் நடத்தும் பல கூட்டங்களில் கலந்துகொள்ள செல்ல வேண்டி இருக்கும். குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க போதிய நேரம் இருக்காது,” என்று சென்ற ஆண்டில் பெண் குழந்தையைப் பெற்ற திருவாட்டி கிறிஸ்டல் கோ, 30, என்பவர் கூறினார்.
இத்தகைய தாய்மார்களைப் பொறுத்தவரை, வீட்டில் இருந்து வேலை பார்ப்பது ஒரு வரப்பிரசாதம் என்று கேகே மகளிர், சிறார் மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தை மருத்துவத் துறை தலைவரான மூத்த ஆலோசகர் இணைப் பேராசிரியர் சுவா மெய் சியென் கூறுகிறார்.
வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் போக்கு காரணமாக இந்த மருத்துவமனையின் தாய்ப்பால் வங்கியும் நன்மை அடைந்துள்ளது. மற்ற நாடுகளில் நிலைமை வேறு விதமாக இருக்கையில் இங்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான தாய்ப்பால் இருப்பில் உள்ளது என்று அவர் கூறினார்.
இந்தத் தாய்ப்பால் வங்கிக்கு கடந்த ஓராண்டு காலத்தில் கொடையாகத் தரப்பட்ட தாய்ப்பால் சராசரி அளவு 12 லிட்டரில் இருந்து 30 லிட்டராகக் கூடி இருக்கிறது.
நன்கொடையாக வழங்கப்படும் தாய்ப்பாலை கெடாமல் பாதுகாத்து அதை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கைக்குழந்தைகளுக்கும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் இந்த வங்கி கொடுக்கிறது.