வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் முதிர்ச்சி அடைந்த பிரபலமான குடியிருப்பு பேட்டைகளில் அதிக பிடிஓ வீடுகளை விற்பனைக்கு கொடுத்து உள்ளது.
2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ 50 விழுக்காடு அதிகமாக சென்ற ஆண்டில் 13 திட்ட வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டதாக கழகம் நேற்று தெரிவித்தது.
2017ல் விடப்பட்ட மொத்த பிடிஓ வீடுகளில் 44 விழுக்காடு முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் கட்டப்பட்டன. இந்த விகிதாச்சாரம் சென்ற ஆண்டு 55 விழுக்காடாகக் கூடியது என்று கழகம் குறிப்பிட்டு உள்ளது.
இருந்தாலும்கூட பீஷான், தோ பாயோ அல்லது காலாங்/வாம்போ போன்ற பிரபலமான முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் விரும்பிய வீட்டைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றாகத் தெரியவில்லை.
முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் வீவக வீடுகளுக்கான விண்ணப்பங்களின் சராசரி விகிதம் 2017ல் 2.8 மடங்காக இருந்தது. அது சென்ற ஆண்டு 6.7 மடங்காக அதிகரித்தது.
புக்கிட் பாத்தோக், தெங்கா போன்ற முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் இந்தச் சராசரி விகிதங்கள் முறையே 2.1 மடங்காகவும் 4.8 மடங்காகவும் இருந்தன.
ஒட்டுமொத்தத்தில் கடந்த நான்காண்டுகளில் புதிய வீடுகளுக்கு தேவை அதிகமாக இருந்து வந்துள்ளது. ஒரு பிடிஓ வீட்டிற்கு மனு செய்தவர்களின் எண்ணிக்கை 2017ல் 2.3 ஆக இருந்தது. அது சென்ற ஆண்டு 5.8 ஆகக் கூடி இருக்கிறது.
குறிப்பாக சில திட்ட வீடுகளுக்கு 50 விண்ணப்பங்கள் கூட வந்திருக்கின்றன. கொவிட்-19 காரணமாக வீடுகளுக்கான காத்திருப்பு காலமும் கூடி இருக்கிறது.
திருமணம், குடும்ப வாழ்வு, மாறும் வாழ்க்கைப் பாணி, சமூக விருப்பங்கள் ஆகியவை காரணமாக அரசாங்க வீடுகளுக்கு வலுவான தேவை இருக்கிறது என்று கழகம் கூறியது.
இளைய தம்பதிகளில் அதிகமானோர் தனிக்குடித்தனத்தை விரும்புகிறார்கள் என்பதையும் கழகம் சுட்டியது.
குடும்ப உறுப்பினர்களுக்கு அருகில் வசிக்கவும் நாட்டம் அதிகரித்து இருக்கிறது.
இதனிடையே, பிடிஓ வீடுகள் சீராக கிடைப்பதைக் கழகம் தொடர்ந்து நிலைநாட்டி வரும்.
இந்த ஆண்டு திட்டமிட்டதைப் போல ஏறத்தாழ 17,000 வீடுகள் விற்பனைக்கு கொடுக்கப்படும் என்றும் கழகம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் ஹவ்காங், ஜூரோங் ஈஸ்ட், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், தெம்பனிசில் ஏறத்தாழ 4,900 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு வரும்.
வரும் நவம்பரில் சுவா சூ காங், ஹவ்காங், ஜூரோங் வெஸ்ட், காலாங்/வாம்போ, தெங்கா ஆகியவற்றில் ஏறத்தாழ 3,100 முதல் 3,600 பிடிஓ வீடுகள் விற்பனைக்குக் கொடுக்கப்படும்.
வீவக: கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய வீடுகளுக்குத் தேவை அதிகம்